Published : 20 Mar 2018 12:53 PM
Last Updated : 20 Mar 2018 12:53 PM

தமிழகத்தில் நடப்பது பாஜக ஆட்சியா? அதிமுக ஆட்சியா? - ஸ்டாலின் சரமாரி கேள்வி

 

விஸ்வ இந்து பரிஷத் ரத யாத்திரைக்கு அதிமுக அரசு அனுமதி அளித்துள்ளது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் தற்போது நடப்பது அதிமுக ஆட்சியா? பாஜக ஆட்சியா? என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஸ்வ இந்து பரிஷத் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின் கூறியதாவது:

‘‘விஸ்வ இந்து பரிஷத் ரத யாத்திரையால் தமிழகத்தில் மதக் கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த ரத யாத்திரை ராமர் கோயில் கட்டுவதற்காக என சொல்லப்படுகிறது. ஆனால் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ள நிலையில், விஸ்வ ஹிந்து பரிஷத் ராம ராஜ்ய ரத யாத்திரையை அனுமதிக்கக் கூடாது.

இதனால் தமிழகத்தின் மதச் சார்பற்ற தன்மைக்கும், பன்முகத் தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் இந்த அரசு அனுமதித்துள்ளது. தற்போது நடப்பது அதிமுக ஆட்சியா? பாஜக ஆட்சியா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

பாஜகவிற்கு ஜால்ரா போடும் ஆட்சியாக அதிமுக ஆட்சி உள்ளது. இது பெரியார் பிறந்த மண், அண்ணா பிறந்த பூமி, இங்கு இதுபோன்ற யாத்திரை நடத்துவதை அனுமதிக்க முடியாது. பாஜகவிற்கு துதி பாடும் ஆட்சியாக, குதிரைபேர எடப்பாடி பழனிசாமி ஆட்சி உள்ளது'' என ஸ்டாலின் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x