Published : 20 Mar 2018 11:16 AM
Last Updated : 20 Mar 2018 11:16 AM

திமுக மூத்த உறுப்பினர்கள் பயன்பெற புதிய திட்டம்: கருணாநிதி, முக.ஸ்டாலினுக்கு உதயநிதி வேண்டுகோள்

திமுகவின் மூத்த உறுப்பினர்கள் பயன் பெறும் வகையில் புதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் முக. ஸ்டாலினுக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில், மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக மதுரை ஒத்தக்கடையில் நேற்று நடைபெற்றது. பி.மூர்த்தி எம்எல்ஏ தலைமை வகித்தார். முன்னாள் பேரவைத் தலைவர் சேடபட்டி முத்தையா, தெற்கு மாவட்ட செயலர் மு.மணிமாறன் முன்னிலை வகித்தனர்.

விருது பெறுவதற்காக புறநகர் மாவட்டத்தை சேர்ந்த 70 வயது முதல் 102 வயது வரையுள்ள மூத்த உறுப்பினர்கள் 1,306 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு முரசொலி நாளிதழ் மேலாண்மை இயக்குநரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ரூ.5 ஆயிரம் பண முடிப்புடன் பொற்கிழி விருது சான்றிதழ்களை வழங்கினார். பின்னர், அவர் பேசியது: நான் 1,306 மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும்போது, பலர் கருணாநிதி எப்படி இருக்கிறார் என கேட்டனர். சில தாய்மார்கள் தழுவி முத்தம் கொடுத்து பாசம் காட்டினர். நான் பெரியார், அண்ணாவை பார்த்தது இல்லை. எனக்கு தெரிந்ததெல்லாம் கருணாநிதி, அன்பழகன்தான்.

வாழ்க்கையிலேயே மறக்க முடியாத விழா இது. மூர்த்தி எம்எல்ஏ விழாவை திட்டமிட்டு நடத்தி கட்சிக்கு கவுரவம் சேர்த்துள்ளார். நான் மு.க. ஸ்டாலினுக்கும், கருணாநிதிக்கும் அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த விழாவை போன்று தமிழகம் முழுவதும் உள்ள திமுக மூத்த உறுப்பினர்கள் பயன் அடையும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அது, அவர்களின் மருத்துவச் செலவுக்கு பயன் அளிப்பதாக இருக்கவேண்டும். என்றார்.

இவ்விழாவில், மதுரை புறநகர் மாவட்ட திமுகவினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x