Published : 20 Mar 2018 09:37 AM
Last Updated : 20 Mar 2018 09:37 AM

சென்னை கோயம்பேடு சந்தை, புறநகர் பேருந்து நிலையத்தை மாநகராட்சியிடம் ஒப்படைக்க சிஎம்டிஏ முடிவு

கோயம்பேடு சந்தை மற்றும் புறநகர் பேருந்து நிலையத்தை நிர்வகிப்பதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதால், அவற்றை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க சிஎம்டிஏ திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில், கோயம்பேட்டில் 295 ஏக்கர் பரப்பளவில் மொத்த விற்பனை சந்தை வளாகம் கடந்த 1996-ம் ஆண்டு திறக்கப்பட்டது. அதேபோன்று கோயம்பேடு சந்தை அருகில் 36 ஏக்கர் பரப்பளவில் புறநகர் பேருந்து நிலை யம் அமைக்கப்பட்டு, கடந்த 2002-ல் திறக்கப்பட்டது. மேலும் கோயம்பேடு சந்தை அருகில் 14 ஏக்கர் பரப்பளவில் உணவு தானிய விற்பனை வளாகம் கடந்த 2016-ல் திறக்கப்பட்டது. அதில் 492 கடைகள் உள்ளன. இங்கு தினமும் 180 டன் குப்பை கள் தேங்குகின்றன.

பாரமரிப்பு பணிகள்

இதற்கான பாரமரிப்புகளை சில தினங்களுக்கு முன்பு கோயம்பேடு சந்தை நிர்வாகத்திடம் சிஎம்டிஏ ஒப்படைத்துள்ளது. கோயம்பேடு சந்தை மற்றும் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் அனைத்து வளாகங்களிலும் உள்ள கடைகளிடம் மாநகராட்சி சொத்து வரி வசூலித்து வருகிறது.

சிஎம்டிஏவுக்கு நகர மேம்பாட்டு திட்டங்களை வகுப்பது, அதை ஒழங்குபடுத்துவது, கட்டிட அனு மதி வழங்குவது, கட்டிட விதி மீறல்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பது என முக்கிய பணிகள் உள்ள நிலையில் கோயம்பேடு சந்தை மற்றும் புறநகர் பேருந்து நிலைய பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது சிரமமாக இருந்தது.

அதனால் கோயம்பேடு சந்தை ஆக்கிரமிப்புகளாலும், குப்பைகளை முறையாக அகற்றாமலும் அசுத்தமாக உள்ளது. புறநகர் பேருந்து நிலையத்திலும், கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை. இந்நிலையில், சந்தை மற்றும் பேருந்து நிலையத்தை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க சிஎம்டிஏ முடிவு செய்தது.

ஆலோசனைக் கூட்டம்

அது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வீட்டு வசதித் துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் தலைமையில் அண்மையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அதில் அப்போதைய சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் சி.விஜயராஜ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதில் கோயம் பேடு சந்தை மற்றும் புறநகர் பேருந்து நிலையத்தை பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “கோயம்பேடு சந்தை உள்ளிட்டவற்றை மாநகராட்சியிடம் சிஎம் டிஏ ஒப்படைப்பது தொடர்பாக கருத்துரு உள்ளது. அது தொடர் பாக மாநகராட்சி நிர்வாகம்இன்னும் முடிவெடுக்கவில்லை” என்றனர்.

கோயம்பேடு சந்தை வளாகத்தை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க இருப்பது தொடர்பாக காய்கறி வியாபாரிகளிடம் கேட்டபோது, “மாநகராட்சி வசம் கோயம்பேடு சந்தையை ஒப்படைப்பதில் தவறில்லை. ஆனால் அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல் நிர்வாகம் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x