Published : 20 Mar 2018 08:30 AM
Last Updated : 20 Mar 2018 08:30 AM

திராவிட நாடு பேச்சால் தேச ஒற்றுமை பாதிக்கப்படும்: விஎச்பி முன்னாள் செயல் தலைவர் கருத்து

தனித் தமிழ்நாடு, திராவிட நாடு என்ற பிரிவினைவாத பேச்சால் தேச ஒற்றுமைக்கும், பெற்ற சுதந்திரத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் அகில உலக முன்னாள் செயல் தலைவர் வேதாந்தம் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட தமிழ்நாடு பூக்கட்டுவோர் நலப்பேரவை நிறுவனத் தலைவரும் அகில உலக விஸ்வ இந்து பரிஷத்தின் முன்னாள் செயல் தலைவருமான வேதாந்தம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தவரை நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4 சதவீதமாக இருந்தது. பாஜக ஆட்சிக்கு வந்ததும் 7 சதவீதமாக உயர்ந்துள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் 300 எம்.பி.க்களை கொண்டு மத்தியில் ஸ்திரமாக ஆட்சி செய்வதால்தான் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடிகிறது.

காங்கிரஸ் கட்சியால் தனி மெஜாரிட்டியுடன் இனி ஆட்சி அமைக்க முடியாது. பல கட்சிகளை கூட்டணியில் சேர்த்து நிலையான ஆட்சி அமைப்பதற்கும் உத்தரவாதம் கிடையாது.

கூட்டணி ஆட்சி வாய்ப்பில்லை

ஏற்கெனவே, மாநில கட்சிகளான சமாஜ்வாடி, தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்., திமுக, அதிமுக எல்லாம் ஒன்று சேராத நிலையில் தேசிய அளவில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை.

தனி தமிழ்நாடு, திராவிட நாடு என்று அண்மைக் காலமாக பிரிவினைவாதம் பேசுகின்றனர். ஏற்கெனவே மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதால்தான் காவிரி நீருக்கும், மற்ற மாநிலங்களின் நதிநீர் பங்கீட்டுக்கும் பிரச்சினை உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம்

திராவிட நாடு என்ற பேச்சால் பெற்ற சுதந்திரத்துக்கும், தேசிய ஒற்றுமைக்கும் பாதிப்பு ஏற்படும். காவிரி நீர் பங்கீட்டில் தமிழகத்துக்கு உரிய உரிமையை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x