Published : 03 Mar 2018 06:17 PM
Last Updated : 03 Mar 2018 06:17 PM

சட்டவிரோதமாக செயல்படும் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறுகளை உடனே மூடவேண்டும்: ஜவாஹிருல்லா

சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் உரிமம் பெறாத ஓ.என்.ஜி.சி கிணறுகளை உடனடியாக மூடவேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டின் காவிரிப் படுகை மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சியின் சட்டவிரோத மற்றும் பாதுகாப்பற்ற செயல்பாடுகள் தொடர்பாக 'காவிரி டெல்டா வாட்ச்' என்ற தன்னார்வ அமைப்பு ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. தகவல் உரிமைச் சட்ட பதில்கள் மற்றும் இணைய ஆவணங்கள் மூலம் காவிரி படுகை பகுதியில் உரிய உரிமம் இல்லாமல் ஓ.என்.ஜி.சி. செயல்படுவதை இந்த ஆய்வறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

அந்த ஆய்வறிக்கையில் டெல்டா மாவட்டங்களில் இயங்கும் ஓ.என்.ஜி.சி.யின் ஹைட்ரோகார்பன் கிணறுகளில் ஒன்றுக்குக் கூட முறையான சுற்றுச்சூழல் உரிமத்தை தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியத்திலிருந்து ஓஎன்ஜிசி பெறவில்லை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

ஓ.என்.ஜி.சி. அறிவித்த 700 கிணறுகளில் 219 கிணறுகள் தொடர்பான தகவல்கள் மட்டுமே தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் உள்ளது. டெல்டா மாவட்ட எண்ணெய்க் கிணறுகள் அனைத்தும் உரிய உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாகச் செயல்பட்டு வருகிறது என்பது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சித் தகவலாக உள்ளது.

உரிய உரிமம் இல்லாமல் செயல்பட்டு வரும் ஓ.என்.ஜி.சியின் சட்ட விரோத செயல்பாடுகளை தட்டிக்கேட்ட பல கிராம மக்கள் மீது வழக்குப் போட்டும், உரிமம் இல்லாமல் இயங்கிய கதிராமங்கலம் கிணற்றின் எண்ணெய்க் கசிவை எதிர்த்துப் போராடிய அக்கிராம மக்களைக் காவல்துறை துன்புறுத்தி சிறையில் அடைத்ததும் நியாயமற்ற செயல் என்பதை இந்த ஆய்வறிக்கை உறுதி செய்கிறது.

சுற்றுச்சூழலும் பொருளாதாரமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். பொருளாதாரத்திற்காக சுற்றுச் சூழலை நம்மால் பாதுகாக்க முடியவில்லை என்றால் மனித இனத்தை நம்மால் பாதுகாக்க இயலாது என்பதை மத்திய மாநில அரசுகள் உணர வேண்டும்.

எனவே, சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் உரிமம் பெறாத ஓ.என்.ஜி.சி கிணறுகளை உடனடியாக மூடவேண்டும்; உரிமம் இல்லாத எண்ணெய்க் கிணறுகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எப்படி அனுமதித்தார்கள் என்பதைப் புலனாய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த எண்ணெய்க் கிணறுகளுக்கு எதிராகப் போராடிய அப்பாவி டெல்டா விவசாயிகளின் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

நன்னிலம், கடமங்குடி, அம்மாபேட்டை போன்ற பகுதிகளில் அமைக்கவிருக்கும் எண்ணெய்க் கிணறுகள் தொடர்பான நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும். காவிரிப் படுகை (டெல்டா) மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்'' என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x