Published : 03 Mar 2018 09:42 AM
Last Updated : 03 Mar 2018 09:42 AM

சட்டப்பேரவை சிறப்புச் செயலர் நியமனத்தை எதிர்த்து வழக்கு: ஆளுநரின் செயலர் பதிலளிக்க உத்தரவு

சட்டப்பேரவை சிறப்புச் செயலர் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஆளுநரின் செயலர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவையின் சிறப்புச் செயலாளராக சீனிவாசன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சட்டப் பேரவையின் கூடுதல் செயலாளர் வசந்தி மலர் மற்றும் இணைச் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முன் அனுபவம் இல்லை

அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘‘பேரவையின் செயலாளராக பதவி வகித்த பூபதி கடந்த பிப்.28-ம் தேதியுடன் ஓய்வு பெற்றுவிட்டார். இந்நிலையில், விதிகளை மீறி சீனிவாசன் என்பவரை சட்டப்பேரவை சிறப்புச் செயலாளராக புதிய பதவியில் நியமித்து அவரையே பேரவையின் செயலராகவும் நியமிக்க திட்டமிட்டுள்ளனர். சீனிவாசனுக்கு பேரவையின் நிர்வாகப் பிரிவில் முன் அனுபவம் ஏதும் இல்லை. எனவே அவரை பேரவையின் சிறப்புச் செயலாளராக நியமிக்கவோ அல்லது பேரவைச் செயலாளராக நியமிக்கவோ கூடாது. அவரை தேர்வு செய்ய தடை விதிக்க வேண்டும்’’ என வாதிட்டார்.

விசாரணை தள்ளிவைப்பு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் வாதிடுகையில், ‘‘பேரவைச் செயலர் பதவி என்பது மிகவும் முக்கியமானது. புதிய பேரவைச் செயலரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் இன்னும் முடிவு பெறவில்லை. எனவே அந்த பதவிக்கான நியமனத்துக்கு தடை விதிக்கக் கூடாது’’ என வாதிட்டார்.

அரசு தரப்பு வாதம் முடிவடையாததால் இந்த வழக்கு விசாரணையை வரும் மார்ச் 6-ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, இதுதொடர்பாக ஆளுநரின் செயலர் பதிலளிக்க உத்தர விட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x