Published : 03 Mar 2018 08:46 AM
Last Updated : 03 Mar 2018 08:46 AM

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் மார்ச் 8-ம் தேதி சென்னையில் மகளிர் தின பொதுக்கூட்டம்: பெண்கள் அதிக அளவில் பங்கேற்க தீவிர ஏற்பாடு

மகளிர் தினத்தை முன்னிட்டு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் வரும் 8-ம் தேதி சென்னையில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இதில் பெண்களை அதிக அளவில் பங்கேற்கச் செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் தனது கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை அறிவித்ததைத் தொடர்ந்து, உயர்நிலைக் குழு நிர்வாகிகள் நியமனம், பேச்சாளர்கள் நியமனம், உறுப்பினர்கள் சேர்க்கை என்று கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதன் அடுத்தகட்டமாக கட்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை யில் வரும் 8-ம் தேதி பொதுக்கூட் டம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்க உள்ள இந்த பொதுக்கூட்டத்துக்கு கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்குகிறார். மகளிர் தின பொதுக்கூட்டத்தை நடத்துவதற்காக கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களான நடிகை ஸ்ரீப்ரியா ராஜ்குமார், கமீலா நாசர் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுக்கூட்டத்தில் பெண்களை அதிக அளவில் பங்கேற்கச் செய்ய மக்கள் நீதி மய்யத்தினர் தீவிர ஏற்பாடு செய்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கடந்த 21-ம் தேதி தொடங்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.

இதற்கிடையில், இணையதளம் மூலம் கட்சி உறுப்பினர் சேர்க்கையும் நடந்து வருகிறது. இணையதளம் மூலம் 2 லட்சம் பேர் கட்சியில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர உறுப்பினர் படிவங்கள் மூலமாக வும் உறுப்பினர் சேர்க்கை நடக்க உள்ளது.

இதற்காக சிவகாசியில் இருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அச்சடிக்கப்பட்ட உறுப்பினர் படிவங்கள், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டன.

அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள், கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த உறுப்பினர் படிவங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இதன் வாயிலாக, அவர்கள் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த உள்ளனர்.

இதைத் தொடர்ந்து, திருச்சி யில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஏப்ரல் 4-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, பிரம்மாண்டமாகவும், எழுச்சியாகவும் திருச்சி பொதுக்கூட்டத்தை நடத்தவேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்’ என்று கட்சி தலைமையில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x