Published : 03 Mar 2018 08:16 AM
Last Updated : 03 Mar 2018 08:16 AM
தமிழகத்துக்குள் ஆந்திர காவல் துறையினர் அத்துமீறி நுழைந்து கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது உச்ச நீதிமன்ற வழிகாட்டு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை தமிழக காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் ஆந்திர மாநிலம் கடப்பா அருகே 5 தமிழர்கள் அங்குள்ள ஏரியில் பிணமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில், செம்மரம் கடத்தியதாக கூறி ஆந்திர காவல்துறையினர் தமிழகத்துக்குள் அத்துமீறி புகுந்து கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 500 தமிழர்களை கைது செய்துள்ளதாகக் கூறி, சிறை கைதிகள் உரிமை பாதுகாப்பு சங்கத் தலைவரும் வழக்கறிஞருமான புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது, தமிழகத்துக்குள் புகுந்து ஆந்திர காவல் துறையினர் தமிழர்களை கைது செய்யும்போது அதுதொடர்பாக தமிழக டிஜிபியிடம் தகவல் தெரிவிப்பதும் இல்லை. கைது செய்தபின் நீதிமன்றத்திலும் முறையாக ஆஜர்படுத்துவதும் இல்லை. இதுவரை 10,664 தமிழர்களை ஆந்திர காவல்துறையினர் அத்துமீறி கைது செய்துள்ளனர். இதனால் மனித உரிமை அப்பட்டமாக மீறப்படுகிறது’’ என மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
அப்போது நீதிபதிகள், ‘‘ஒரு மாநிலத்துக்குள் வந்து மற்றொரு மாநில போலீஸார் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை யாராக இருந்தாலும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்த வழக்கில் இதுதொடர்பாக ஆந்திர போலீஸாருக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. ஆனால், இந்த விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படுவதை தமிழக காவல்துறை உறுதி செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT