Published : 03 Mar 2018 08:12 AM
Last Updated : 03 Mar 2018 08:12 AM

காவல் நிலைய வளாகத்தில் விவசாயி தீக்குளித்து தற்கொலை

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் அடுத்த மஞ்சாரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது மஞ்சாரப்பட்டிகாடு கிராமத்தைச் சேர்ந்த மாது மகன் ஆசைத்தம்பி (36). விவசாயி. இவரது மனைவி பழனியம்மாள். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், தம்பதியிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு பழனியம்மாள் சமீப காலமாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையில், ஆசைத்தம்பி கடன் பிரச்சினைக்கும் உள்ளாகி யுள்ளார்.

மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி ஆசைத்தம்பி 1 மாதத்துக்கு முன்பு ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாருக்கு தீர்வு காண வேண்டி அவர் பல முறை காவல் நிலையத்துக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றும் அவர் தன் பிரச்சினைக்கு தீர்வு கேட்டு ஏரியூர் காவல் நிலையத்துக்கு சென்றுள்ளார். தன் பிரச்சினை குறித்து காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி நேற்று மாலை காவல் நிலைய வளாகத்தில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு ஆசைத்தம்பி தீக்குளித்துள்ளார்.

இதைக்கண்ட அப்பகுதி மக்களும், காவல்துறையினரும் போராடி அவரை மீட்டு உடனடியாக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால், மருத்துவர்களின் பரிசோதனையில் அவர் முன்பே உயிரிழந்தது தெரிய வந்தது. காவல் நிலைய வளாகத்தில் அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து ஏரியூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x