Published : 13 Feb 2018 09:52 PM
Last Updated : 13 Feb 2018 09:52 PM

பள்ளிக்கரணையில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள சொத்து அபகரிப்பு: உடந்தையாக இருந்த பெண் அதிகாரி கைது

ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள சொத்தை ஆள் மாறாட்டம் செய்து அபகரிக்க உடந்தையாக இருந்த பெண் சார் பதிவாளர் கைது செய்யப்பட்டார்.

சென்னை ஆலப்பாக்கத்தில் வசிப்பவர் சிதம்பரம். இவரது தந்தை சொக்கலிங்கம். இவர்களுக்கு சொந்தமாக பள்ளிக்கரணையில் உள்ள காமகோடி நகரில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள 3352 சதுர அடி காலி இடம் உள்ளது.

இடத்தின் உரிமையாளர் சொக்கலிங்கம் 1995-ம் ஆண்டு இறந்தார். அதன் பிறகு, கடந்த 2017 ஆண்டு மார்ச் மாதம் சைதாப்பேட்டை பத்திர பதிவு அலுவலகத்தில் ஜீவன் பவுன்டேசன் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் பெரியசாமி என்பவருக்கு சொக்கலிங்கம் சொத்தை எழுதி கொடுத்தது போல் ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணங்கள் தயாரித்து சொத்தை விற்பனை செய்து அபகரித்துள்ளனர்.

இது பற்றி சொத்தின் உரிமையாளர் சென்னை காவல் ஆணையாளரிடம் புகார் அளித்தார். புகார் மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் சைதாப்பேட்டை பெண் சார்பதிவாளர் மைலாப்பூரில் வசிக்கும், சிவப்பிரியா(42) என்பவர் ரூ.20 லட்சம் பெற்றுக் கொண்டு போலியான ஆவணத்தை உருவாக்கி பதிவு செய்ய உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து சிவப்பிரியாவை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இன்று கைது செய்து நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் அடைக்கப்பட்டார். சிவபிரியா மீது மேலும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற நபர்களையும் தனிப்படையினர் தேடிவருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x