Last Updated : 13 Feb, 2018 12:54 PM

 

Published : 13 Feb 2018 12:54 PM
Last Updated : 13 Feb 2018 12:54 PM

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பெயர் பலகையில் ஓரெழுத்தை மாற்றுவதற்காக ஓராண்டாக போராடும் வழக்கறிஞர்

அரசு ராஜாஜி மருத்துவமனை பெயர் பலகையில் உள்ள ஒரு எழுத்தை மாற்றுவதற்காக ஓராண்டாக போராடி வருகிறார் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர்.

மதுரை டிவிஎஸ் நகரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ஆர்.லெட்சுமிநாராயணன். பாரதியார் சிந்தனை மன்றத்தின் செயலராகவும் உள்ளார். இவர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் பெயர் பலகையில் ‘இராசாசி’ என்பதை ‘இராஜாஜி’ என மாற்றக்கோரி கடந்த ஓராண்டாக மதுரை மாவட்ட ஆட்சியர், அரசு மருத்துவமனை டீன் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அனுப்பியுள்ளார். இது தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், அண்மையில் மதுரைக்கு ஆய்வு பணிக்காக வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தையும் நேரில் சந்தித்து பெயர் பலகையில் எழுத்து மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்திருந்தார். அதில், ராஜாஜி பிறந்த இல்லத்தின் முகப்பிலும், மதுரை காந்தி மியூசியம் அருகே உள்ள பூங்காவிலும் ராஜாஜி என்று குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஆர்.லட்சுமி நாராயணன் கூறியதாவது: சுதந்திர போராட்ட வீரர், வழக்கறிஞர், சென்னை மாகாண முதல்வர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை அலங்கரித்தவர் ராஜாஜி. அவரது பெயரை அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக குறிப்பிட வேண்டும். ஆனால், மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் 4 இடங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளில் ‘இராசாசி’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இது பிழையாகும். இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர், அரசு மருத்துவமனை டீன், வருவாய் நிர்வாக ஆணையரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ராஜாஜி பிறந்த கிருஷ்ணகிரி மாவட்டம், தொரப்பள்ளி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் ராஜாஜி என்றே குறிப்பிட்டுள்ளனர். எனவே, மதுரை அரசு மருத்துவமனை பெயர் பலகையில் ‘இராசாசி’ என்றிருப்பதை ‘இராஜாஜி’ என மாற்ற வேண்டும் என்றார்.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், எந்த உத்தரவின் அடிப்படையில் அரசு மருத்துவமனையின் பெயர் பலகையில் இராசாசி என குறிப்பிடப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

அந்த உத்தரவு தொடர்பாக ஏதேனும் அரசாணை உள்ளதா என்பதையும் தேடிவருகிறோம். அதன் பிறகு இந்த விவகாரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x