Published : 13 Feb 2018 12:54 PM
Last Updated : 13 Feb 2018 12:54 PM

இன்று (பிப்.13) உலக வானொலி தினம்: மீனவர்களுக்கு ‘வாட்ஸ்அப்’ வானொலி சேவை அறிமுகம்

உலக வானொலி தினத்தை முன்னிட்டு, ராமேசுவரம் அருகே பாம்பனில் இயங்கிவரும் கடல் ஓசை 90.4 சமுதாய வானொலி நிலையம், வாட்ஸ் அப் வானொலி சேவையை இன்று (செவ்வாய்க்கிழமை) அறிமுகப்படுத்துகிறது.

தொலைக்காட்சி, இணையம், மொபைல்போன் என பல்வேறு தொடர்பு சாதனங்கள் வந்தாலும் வானொலிக்கு தனி இடம் உண்டு. வானொலியை உலகுக்கு தந்த மார்க்கோனி 20.07.1937 அன்று மறைந்தார். அவர் மறைந்து 81 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட மக்களுக்கு வெறும் பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமின்றி, கல்வி அளிக்கும் தகவல் களஞ்சியமாகவும் வானொலிகள் செயல்பட்டு வருகின்றன.

kadalosai-children program கடல் ஓசை வானொலியில் குழந்தைகள் நிகழ்ச்சியில் உரையாற்றும் சிறுவன்.

03.11.2011 அன்று ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) 36-வது பொதுச்சபை கூட்டத்தில் உலக வானொலி தினத்தை அறிவிக்க வேண்டும் என ஸ்பெயின் வலியுறுத்தியது. இதன் அடிப்படையில் யுனெஸ்கோ பிப்ரவரி 13-ம் தேதியை உலக வானொலி தினமாக அறிவித்தது.

கடந்த 04.02.2017 அன்று ராமேசுவரம் அருகே பாம்பனில் நேசக்கரங்கள் அறக்கட்டளை சார்பில், உலகிலேயே முதன்முறையாக ‘கடல் ஓசை’ என்ற பெயரில் மீனவர்களுக்கான பிரத்யேக சமுதாய வானொலி நிலையத்தை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், உலக வானொலி தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில், கடந்த ஓராண்டாக ஒலிபரப்பப்பட்டு வரும் கடல் ஓசை சமுதாய வானொலி வாட்ஸ் அப் வானொலி சேவையை இன்று (செவ்வாய்கிழமை) முதல் தொடங்குகிறது. இதுகுறித்து கடல் ஓசை வானொலியின் நிறுவனர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்ட மீனவ இளைஞர்களுக்கு அகில இந்திய வானொலி வல்லுநர்கள் மூலம் பயிற்சி அளித்து, இளைஞர்களாலேயே 'கடல் ஓசை’ சமுதாய வானொலி 90.4 என்ற அலைவரிசையில் கடந்த ஓராண்டு காலமாக இயங்கி வருகிறது.

கடல் ஓசை வானொலியில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் மீன்பிடித் துறைமுகங்களில் இருந்து செல்லும் ஆயிரக்கணக்கான மீனவர்களுக்கு சுனாமி, புயல் சின்னம், கடல் சீற்றம் போன்ற ஆபத்தான காலங்களில் மீனவர்கள் செய்ய வேண்டியது என்ன?, கடலில் அபாயகரமான பகுதிகள் எவை? அதிக மீன்கள் கிடைக்கும் இடங்கள் ஆகிய தகவல்கள் ஒலி பரப்பப்பட்டு வருகின்றன.

மேலும் மீனவர்களுக்கான மத்திய, மாநில அரசின் நலத் திட்டங்கள், மீனவக் குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு, மீனவப் பெண்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, சுகாதாரமான முறையில் மீன்களை கையாள்வது, மீன் சந்தைப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி, குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான நிகழ்ச்சி, மன்னார் வளைகுடா, பாக். ஜலசந்தி கடல் பகுதியில் வசிக்கும் அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கடல் ஓசை வானொலியிலும் www.kadalosaifm.com இணையதளத்திலும் கேட்கலாம்.

முன்னோடி வானொலி அறிவிப்பாளர் பி.ஹெச். அப்துல் ஹமீது ஆலோசனையின் பேரில், உலக வானொலி தினத்தை முன்னிட்டு கடல் ஓசை வானொலியில் ஒலிபரப்பப்படும் தகவல்களை நேயர்களிடம் உடனுக்குடன் பரிமாறிக் கொள்வதற்கு வசதியாக வாட்ஸ் அப் வானொலி சேவையை +91 7094439999 என்ற எண்ணிலிருந்து துவங்குகிறோம்.

வானொலி நிகழ்ச்சி குறித்தும் நேயர்கள் தங்களின் கருத்துகளை இதன் மூலம் உடனுக்கு டன் தெரியப்படுத்துவதன் மூலம் நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் அவை இடம்பெறும் என்றார் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x