Published : 13 Feb 2018 12:55 PM
Last Updated : 13 Feb 2018 12:55 PM
பிரதமர் மோடியை கண்டித்து புதுச்சேரியில் பக்கோடா போட்டு போராட்டம் நடத்திய முதல்வர் நாராயணசாமிக்கு பதிலடி தரும் வகையில் ‘நாராயணசாமி அல்வா கடை’யை திறந்து விற்பனையில் ஈடுபட்டு பாஜகவினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“இளைஞர்கள் பக்கோடா விற்று தினமும் சம்பாதிக்கின்றனர்; அதுவும் நல்ல வேலைவாய்ப்புதானே!’’ என்று பிரதமர் மோடி அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
மோடியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த வாரம் புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி, பக்கோடா போட்டு, விற்பனை செய்தார். இப்போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர் காங்கிரஸார், பட்டதாரி இளைஞர்கள் போல் உடையணிந்து பக்கோடா விற்பனை செய்தனர். காங்கிரஸாரின் இந்தச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி பாஜகவினர் நேற்று நேரு வீதி - காந்தி வீதி சந்திப்பில் அல்வா விற்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"நாராயணசாமி அல்வா கடை" எனப் பெயரிட்டு அல்வா கடையை திறந்து பாஜகவினர் விற்பனையில் ஈடுபட்டனர். பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அக்கட்சியினர் கலந்து கொண்டு அல்வா விற்றனர். "புதுவை முதல்வர் நாராயணசாமி ஆட்சிக்கு வந்து எந்த திட்டத்தையும் நிறைவேற்றாமல் மக்களுக்கு ‘அல்வா’ கொடுக்கிறார்.
இதை மக்களுக்கு புரிய வைக்கவே இந்த ‘அல்வா போராட்டம்’ நடத்துகிறோம். புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவில்லை. பல்வேறு வரிகளை உயர்த்தியுள்ளதுதான் சாதனை.
‘எல்லா தொழிலும் உயர்ந்ததே’ என்ற நோக்கத்தில் இளைஞர்களை ஊக்கப்படுத்த பிரதமர் மோடி, பக்கோடா விற்கும் இளைஞர்கள் பற்றி கூறியிருந்தார். அதற்கு பிரதமரை கிண்டல் செய்து ஒரு போராட்டத்தை முதல்வர் நாராயணசாமி நடத்தினார். அதற்கு மன்னிப்பு கேட்கும் வரை பாஜகவின் போராட்டங்கள் தொடரும்" என்று போராட்டத்தில் பங்கேற்ற பாஜகவினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT