Published : 13 Feb 2018 12:56 PM
Last Updated : 13 Feb 2018 12:56 PM
யுனஸ்கோ நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள, நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயிலை மீண்டும் நிலக்கரி மூலம் இயக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினமும் இயக்கப்பட்டு வரும் மலை ரயிலில் பயணம் செய்ய உள்நாடு மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வரும் இந்த மலை ரயில், ஆரம்பத்தில் நிலக்கரியை எரித்து, அதன் மூலம் உருவாகும் நீராவியின் உந்து சக்தியில் இயங்கியது. எனினும், நிலக்கரி மூலம் இயக்குவதில் பல்வேறு சிக்கல் கள் எழுந்தால், நிலக்கரி பயன்பாட்டை நிறுத்திவிட்டு, அதன் பழமை மாறாமல் பர்னஸ் ஆயில் மூலம் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது மலை ரயிலை இயக்க 6 இன்ஜின்கள் உள்ள நிலையில், ஒன்று மட்டுமே நிலக்கரி மூலம் இயங்கும் இன்ஜினாகும். இதுவும் கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படவில்லை. மலை ரயிலின் பழமையை பறைசாற்றும் வகையில், உதகை ரயில் நிலையத்தில் இந்த இன்ஜின் நிறுத்திவைக்கபட்டி ருந்தது.
இதற்கிடையே, மீண்டும் மலை ரயிலை நிலக்கரி மூலம் இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, நிலக்கரி இன்ஜின் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு, பழுது பார்க்கப்பட்டது.
சுமார் 10 ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த இன்ஜின் மீண்டும் இயங்கும் வகையில் சரி செய்யப்பட்டது. புதுபிக்கப்பட்ட நிலக்கரி இன்ஜினோடு ஒரு பெட்டியை மட்டும் இணைத்து, சமதளப் பகுதியான மேட்டுப்பாளையம் முதல் கல்லார் ரயில் நிலையம் வரை உள்ள 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு நேற்று சோதனை இயக்கம் நடத்தப்பட்டது. ஆனால், நிலக்கரி இன்ஜினால் 2 கிலோமீட்டர் தொலைவுகூட பயணிக்க இயலவில்லை. இன்ஜினின் உந்து சக்தி முற்றிலுமாக குறைந்து, மேட்டுப்பாளையம் பவானியாற்றுப் பாலத்துடன் நின்றுவிட்டது.
பழைய முறைப்படி மீண்டும் நிலக்கரி மூலம் மலை ரயிலை இயக்கும் ரயில்வே நிர்வாகத்தின் முதல் சோதனை ஓட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. எனினும், நிலக்கரி என்ஜினின் குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அதை இயக்கம் முயற்சி தொடரும் என்று ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT