Published : 13 Feb 2018 10:32 AM
Last Updated : 13 Feb 2018 10:32 AM

‘தேமுதிகவைக் காக்க உறுதி ஏற்போம்’: கொடி அறிமுக நாள் விழாவில் விஜயகாந்த் அழைப்பு; மக்களுக்கு உதவிகள் செய்யுமாறு தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்

தேமுதிகவைக் காக்க அனைவரும் உறுதி ஏற்போம் என்று தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நற்பணி இயக்கமாக இருந்தபோதே 2000-ம் ஆண்டில் ஒட்டுமொத்த ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மூவர்ண கொடியாக சிவப்பு, மஞ்சள், கருப்பு நிறம் கொண்ட புரட்சி தீபத்துடன் நம் மன்ற கொடி அறிமுகம் செய்யப்பட்ட நாள் பிப்.12. ஆகும். கொடி அறிமுகத்தின் 18-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை எண்ணி அனைவரும் பெருமைப்படுவோம்.

2005-ம் ஆண்டு தேமுதிக உருவானபோது, மன்றக் கொடியை கட்சிக் கொடியாக மாற்றினோம். கொடி அறிமுக நாளை ஆண்டுதோறும் விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடும் ஒரே கட்சி நமது கட்சிதான்.

தமிழகம் முழுவதும் நம் கொடி பட்டொளி வீசி பறக்கக் காரணமான அனைவருக்கும் இந்த நல்ல நாளில் எனது நன்றியையும் சந்தோஷத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒளிமயமான தமிழகம்

நம் கொடி மூன்று வர்ணங்களை கொண்டு நம் கொள்கைகளையும், லட்சியத்தையும் நாட்டுக்கு எடுத்து சொல்கிறது. சிவப்பு நிறம் வறுமையைப் போக்க, மஞ்சள் நிறம் வளமையைப் பெருக்க, கருப்பு நிறம் ஜாதி, மதம், லஞ்சம், ஊழலை ஒழிக்க, புரட்சி தீபம் ஒளிமயமான தமிழகத்தைக் கொண்டுவர என்ற கொள்கையோடு, லட்சியத்தோடு கொடி உருவாக்கப்பட்டது.

இந்த நாளில் தமிழகம் முழுவதும் கொடி ஏற்றி, நம்மால் இயன்ற உதவிகளை மக்களுக்கு வழங்குவோம். கட்சியையும், நாட்டையும் காக்க அனைவரும் உறுதி ஏற்போம்.

இவ்வாறு அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x