Published : 13 Feb 2018 10:32 AM
Last Updated : 13 Feb 2018 10:32 AM

நீக்கப்பட்டவர்களுக்கு பதிலாக புதிய திமுக நிர்வாகிகளைதேர்வு செய்ய நேர்காணல்

ஆர்.கே.நகரில் நீக்கப்பட்டவர்களுக்குப் பதிலாக புதிய திமுக நிர்வாகிகளை தேர்வு செய்ய அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று நேர்காணல் நடைபெற்றது.

கடந்த டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் என்.மருதுகணேஷ் 24,652 வாக்குகள் மட்டுமே பெற்று 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். திமுக டெபாசிட் தொகையையும் இழந்தது. இது திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தோல்விக் கான காரணங்கள் குறித்து ஆராய திமுக சட்டப்பேரவை கொறடா அர.சக்கரபாணி தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், ஆர்.கே.நகரில் உள்ள திமுகவின் 14 வட்டக் கிளைகள் கலைக்கப்பட்டன. 14 வட்டங்களைச் சேர்ந்த 120-க்கும் அதிகமான நிர்வாகிகள் கட்சிப் பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கப் பட்டனர்.

நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்குப் பதிலாக புதியவர்களை தேர்வு அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற நேர்காணலை, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி நடத்தினர். சுமார் 200-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். ஓரிரு நாளில் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படும் என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x