Published : 13 Feb 2018 10:35 AM
Last Updated : 13 Feb 2018 10:35 AM

மின்சாரம் வாங்கியதற்கான கட்டண நிலுவை ரூ.1000 கோடியை மின்வாரியம் செலுத்த வேண்டும்: மத்திய அரசு வலியுறுத்தல்

கல்பாக்கம் உள்ளிட்ட அணுமின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வாங்கியதற்காக, ரூபாய் ஆயிரம் கோடியை செலுத்துமாறு தமிழ்நாடு மின்வாரியத்தை, மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமாக கல்பாக்கம், கூடங்குளம் மற்றும் கர்நாடகாவில் உள்ள கைகாவில் அணுமின் நிலையங்கள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதில், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்து 330 மெகாவாட்டும், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து 1,150 மெகாவாட்டும், கைகா அணுமின் நிலையத்தில் இருந்து 218 மெகாவாட்டும் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறைந்த விலை மின்சாரம்

அனல்மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து வாங்கப்படும் மின்சாரத்தை விட அணுமின் நிலையங்களில் இருந்து குறைந்த விலைக்கு மின்சாரம் கிடைக்கிறது. அணுமின் நிலையங்களில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ.3-க்கும் குறைவாக கிடைக்கிறது. இதனால், அதிகளவு மின்சாரம் அணுமின் நிலையங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்நிலையில், கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் நிலையங்களில் வாங்கப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணத்தை தமிழ்நாடு மின்வாரியம் உடனடியாக வழங்கவில்லை. இதனால், ஆயிரம் கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. எனவே, இத்தொகையை உடனடியாக செலுத்துமாறு தமிழ்நாடு மின்வாரியத்தை மத்திய அரசு அணுமின் நிலையங்கள் வலியுறுத்தி உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x