Published : 13 Feb 2018 10:33 AM
Last Updated : 13 Feb 2018 10:33 AM
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை பாரிமுனை பகுதியில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட் டனர்.
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திங்கள்கிழமை தலைமைச் செயலகம் நோக்கி இடதுசாரி கட்சிகள் சார்பில் பேரணி நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல். லிபரேசன்) மாநிலச் செயலாளர் எஸ்.குமாரசாமி, எஸ்.யு.சி.ஐ. (சி) மாநிலச் செயலாளர் ஆர்.ரங்கசாமி அறிவித்திருந்தனர்.
அதன்படி, நேற்று காலை பாரிமுனை பகுதியில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் பேரணி செல்ல முயன்றனர். அதற்கு காவல் துறையினர் அனுமதி மறுக்கவே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் ஜி.ராமகிருஷ்ணன் கூறிய தாவது:
விலையேற்றம், வறட்சி, வேலையின்மை பிரச்சினைகளால் தமிழக மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஏழை, நடுத்தர மக்கள் தாங்க முடியாத அளவுக்கு பேருந்து கட்டணத்தை அதிமுக அரசு உயர்த்தியுள்ளது.
பேருந்து கட்டண உயர்வை முழுமையாக திரும்பப் பெற வேண்டும், கட்டண உயர்வை எதிர்த்து போராடிய மாணவர்கள், பொதுமக்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், போக்குவரத்துக் கழகங்களின் இழப்பை ஈடு செய்ய அரசே நிதி ஒதுக்க வேண்டும் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி செல்ல முயன்றோம். அதற்கு அனுமதி மறுக்கப்படவே சாலை மறியலில் ஈடுபட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT