Published : 13 Feb 2018 10:08 AM
Last Updated : 13 Feb 2018 10:08 AM

கடைசி 2 நாள் இணையதளத்தில் கோளாறு: `ஸ்லெட்` தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு வாரம் அவகாசம் கிடைக்குமா? - முதுகலை பட்டதாரிகள் எதிர்பார்ப்பு

`ஸ்லெட்’ தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்படுமா? என்று முதுகலை பட்டதாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால் நெட் அல்லது ஸ்லெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நெட் தேர்வை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் சிபிஎஸ்இ நடத்துகிறது. மாநில அளவிலான ஸ்லெட் தேர்வை நடத்தும் பொறுப்பை அந்த மாநிலத்தில் உள்ள ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்திடம் யுஜிசி வழங்கும். அந்த வகையில், தற்போது ஸ்லெட் தேர்வு நடத்தும் பொறுப்பு கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2018-ம் ஆண்டுக்கான ஸ்லெட் தேர்வு அறிவிப்பை அப்பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்டிருந்தது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்.9-ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள் முதல் முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்க ஆரம்பித்தாலும் கடைசி நாள் நெருங்க நெருங்க அனைவரும் போட்டிப்போட்டு விண்ணப்பித்தனர். இந்நிலையில், கடந்த 2 நாளில் அதாவது பிப்.8, 9 ஆகிய இரு நாட்கள் ஒரே நேரத்தில் ஏராளமானோர் விண்ணப்பிக்க முயன்றதால் இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், அந்த 2 நாட்களும் பல விண்ணப்பதாரர்களால் ஆன்லைனில் சரிவர விண்ணப்பிக்க இயலவில்லை.

தேசிய அளவில் நடத்தப்படும் நெட் தேர்வு போன்று ஸ்லெட் தேர்வானது ஆண்டுதோறும் நடத்தப்படுவது இல்லை. பல பாடங்களுக்கு ஸ்லெட் தேர்வில் தமிழிலும் வினாத்தாள் இருக்கும். எனவே, தமிழக மாணவர்கள் உதவி பேராசிரியர் தகுதி பெறுவதற்கு ஸ்லெட் தேர்வு நல்வாய்ப்பாக இருந்து வருகிறது. எனவே, கடைசி 2 நாட்கள் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு பிரச்சினையை மனத்தில்கொண்டு ஸ்லெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் என முதுகலை பட்டதாரிகள் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x