Published : 13 Feb 2018 09:46 AM
Last Updated : 13 Feb 2018 09:46 AM

தாயின் இறுதிச் சடங்குக்கு பணம் இல்லாமல் தவித்த 3 சிறுவர்களும் ஒரே விடுதியில் தங்கி படிக்க ஏற்பாடு

தாயின் இறுதிச் சடங்குக்கு உதவுவதற்கு பணமோ, உறவுகளோ இல்லாமல் தவித்த சிறுவர்கள் ஒரே இடத்தில் தங்கிப் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பூத்தாம்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்த காளியப்பன் - விஜயா தம்பதியின் மகன்கள் மோகன்ராஜ், வேல்முருகன், மகள் காளீஸ்வரி. இவர்களது தந்தை ஏற்கெனவே இறந்துவிட, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாய் விஜயா, திண்டுக் கல் அரசு மருத்துவமனையில் கடந்த 7-ம் தேதி இறந்தார்.

அவரது உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமலும், உறவுகள் உதவாத நிலையிலும் சிறுவர்கள் தவித்தனர். இதை அறிந்து இவர்களுக்கு பல நல்ல உள்ளங்கள் உதவின. சிறுவர்களின் நிலை குறித்து ‘தி இந்து’ நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக தமிழக சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கிவரும் குழந்தைகள் நலக் குழு, மூவரையும் அழைத்து விசாரித் தது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் திண்டுக்கல் மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு நல அலுவலர்டி.மீனாட்சி கூறியதாவது:

3 சிறுவர்களையும் அழைத்து குழந்தைகள் நலக் குழுவினர் விசாரணை நடத்தினர். அவர்களது விருப்பங்களை தனித்தனியாகக் கேட்டனர். இதில் மூவரும் ஒரே விடுதியில் தங்கிப் பயில விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து, திண்டுக்கல் அருகே உள்ள விடுதியில் 3 பேரும் இலவசமாக தங்கிப் படிக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

8-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திய மோகன்ராஜ் 9-ம் வகுப்பு படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாய், தந்தையை பிரிந்த நிலையில், இவர்களுக் குள் பிரிவு ஏற்படுவதை தவிர்க்க மூவரும் ஒரே விடுதியில் தங்கிப் பயிலும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். தாயின் ஈமக்கிரியை உள்ளிட்ட இறுதிக் கடமைகளை நிறைவேற்றிவிட்டு வருவதாகக் கூறியுள்ளனர். அடுத்த வார தொடக்கம் முதல் அவர்கள் திண்டுக்கல் அருகே உள்ள விடுதியில் தங்கி பள்ளிக்கு செல்வார்கள்.

அவர்களது பாதுகாப்பு, கல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x