Published : 13 Feb 2018 09:09 AM
Last Updated : 13 Feb 2018 09:09 AM
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரும் நாட்களில் வெப்பநிலை படிப்படியாக உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த முறை வடகிழக்கு பருவமழை கடந்த ஜனவரி 15-ம் தேதி வரை நீடித்தது. இதனால் இந்த மார்கழி மாதத்தில் குளிர் நிலவ வேண்டிய நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குளிர் குறைவாகவே இருந்தது. அதன் பிறகும் அவ்வப்போது லேசான மழை பெய்து வந்த நிலையில் குளிர் அவ்வளவாக இல்லை. மலைப் பகுதிகளில் மட்டும் குறைந்தபட்ச வெப்பநிலையில் மிகக்குறைந்த அளவாக 6 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையும், அதிகபட்ச வெப்பநிலையும் உயரத் தொடங்கியுள்ளது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய நாட்களில் சராசரியாக 21 டிகிரி செல்சியஸாக இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரியாக உள்ளது.
வெப்பநிலை அதிகரித்து வருவது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
சூரியன் விரைவாக உதிக்கிறது
சென்னையில் தற்போது மேகக்கூட்டங்கள் நிலவுவதால் குறைந்தபட்ச வெப்பநிலையின் அளவு உயர்ந்துள்ளது. வானிலையானது குளிர் காலத்திலிருந்து கோடை காலத்தை நோக்கி நகர்வதால், சூரியன் விரைவாகவே உதித்து வருகிறது. அதனால் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்து வரும் நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலை படிப்படியாக உயரும்.
இதற்கிடையில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பாளையங்கோட்டை, மதுரை போன்ற ஊர்களில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மட்டும் 1 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT