Published : 11 Feb 2018 01:33 PM
Last Updated : 11 Feb 2018 01:33 PM
தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படம் திறப்பதை கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சில தலைவர்கள் மற்றும் முதல்வர்களாக இருந்த குறிப்பிடத்தக்க சில தலைவர்களின் படங்கள் தமிழக சட்டப்பேரவை மண்டபத்தில் திறக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர், மகாத்மா காந்தி, அம்பேத்கர், பெரியார், முத்துராமலிங்கத் தேவர், ராஜாஜி, காமராஜர், அண்ணா, காயிதே மில்லத், எம்ஜிஆர் ஆகிய பத்து தலைவர்களின் படங்கள் இதுவரை திறக்கப்பட்டுள்ளன.
தற்போது இரண்டே நாளில் அறிவிப்பு வெளியிட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்திய வரலாற்றில் முதல்வராக இருக்கும்போது ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, உச்ச நீதிமன்றமே குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவர் ஜெயலலிதா என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவர் இயற்கையெய்திய காரணத்தினால், சிறைத்தண்டனை வழங்கப்படவில்லை.
இவ்வாறு ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவருக்கு சட்டப்பேரவை வளாகத்தில் படம் திறப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும். எனவே, இந்நடவடிக்கையை கைவிட வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT