Published : 11 Feb 2018 09:33 AM
Last Updated : 11 Feb 2018 09:33 AM
கரூரில் பிரபல ரவுடி பினு வசித்தாகக் கூறப்படும் வீட்டில் குற்றப்புலனாய்வு போலீஸார் சோதனை நடத்தினர்.
சென்னையில் கடந்த 7-ம் தேதி பிரபல ரவுடி பினுவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது சுற்றி வளைத்த போலீஸார், 72 ரவுடிகளை கைது செய்தனர். பிரபல ரவுடி பினு தப்பிவிட்டார். இதுகுறித்து ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது கரூரைச் சேர்ந்த மாதவன் என்பவர், அவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கரூர் மாவட்டம் லாலாபேட்டையைச் சேர்ந்த சிகை அலங்கார தொழிலாளியான மாதவனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், 4 ஆண்டுகளுக்கு முன் சென்னை வடபழனியில் உள்ள பிரபல சலூனில் வேலை செய்தபோது அங்கு வந்த பிரபல ரவுடி பினுவுடன் மாதவனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது.
அதன்பின் கரூர் வந்த மாதவன், கரூர் அருகேயுள்ள சலூன் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் மாதவனிடம் ரவுடி பினு கரூரில் தங்குவதற்கு வீடு கேட்டுள்ளார். இதையடுத்து, ஈரோடு சாலையில் உள்ள மருத்துவர் நகரில் பினுவுக்கு மாதவன் வீடு பிடித்துக் கொடுத்துள்ளார். 3 ஆண்டுகளாக பினு கரூரில் தங்கியிருந்ததாகவும் அவ்வப்போது வெளியூர்களுக்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
பினு பிரபல ரவுடி என்பது தெரியாமலேயே வாடிக்கையாளர் என்ற முறையில் மாதவன் பழகியுள்ளார் என்பதும், அவருடன் வேறு விதமான தொடர்பு இல்லை என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, பினு வசித்ததாகக் கூறப்படும் கரூர் வீட்டுக்கு நேற்று சென்ற சென்னை ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சோதனை நடத்தினர்.
சோதனைக்குப் பிறகு வீட்டுக்கு இரண்டு பூட்டுகள் போட்டு பூட்டியதுடன், அக்கம் பக்கத்து வீட்டாரிடமும் விசாரணை நடத்தியதால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT