Published : 11 Feb 2018 07:29 AM
Last Updated : 11 Feb 2018 07:29 AM

தமிழக கோயில்களில் அசாதாரண சூழ்நிலை: கோயிலின் முழுப் பாதுகாப்பை மத்திய அரசு ஏற்க வேண்டும்- சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கருத்து

தமிழக கோயில்களில் அசாதாரண சூழ்நிலை உள்ளதால் மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்து உள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 2-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்து சேதங்களை ஆய்வு செய்வதற்காக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நேற்று கோயிலுக்கு வந்தார். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளைப் பார்வையிட்ட அவர் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மீனாட்சி அம்மன் கோயில் நிலையை தெரிந்து கொள்வதற்காக கோயிலுக்குள் செல்ல முயன்ற எனக்கு 3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகே அனுமதி கிடைத்தது. 20 ஆண்டுகளுக்கு முன்பே இக்கோயிலை பழுது பார்த்திருக்க வேண்டும். கோயில் என்பது பக்தர்கள் நிம்மதியாக சுவாமி தரிசனம் செய்யும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, வியாபாரம் செய்யும் இடமாக இருக்கக் கூடாது. ஆயிரங்கால் மண்டபத்தின் அருகே பல கடைகள் உள்ளன. கோயிலுக்குள் மட்டுமின்றி கோயில் அருகே உள்ள கடைகளையும் அகற்ற வேண்டும்.

செல்போனுக்கு அனுமதி

தமிழக கோயில்களில் அசாதாரண சூழ்நிலை உள்ளதால் மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்.

கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். அறநிலையத்துறை சரியாக செயல்படவில்லை. அனைத்து கோயில்களிலும் தீயணைப்பு வாகனங்களை நிறுத்த வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x