Published : 11 Feb 2018 07:27 AM
Last Updated : 11 Feb 2018 07:27 AM

பாரதியார் பல்கலைக்கழக விவகாரம்: முன்னாள் மாணவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

பேராசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரையொட்டி, பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களிடம் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் விசாரணை நடத்தினர்.

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி நியமனத்துக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக, துணைவேந்தர் கணபதி (67), அவருக்கு உடந்தையாக இருந்ததாக வேதியியல் துறைத் தலைவர் தர்மராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியதாக தொலைநிலைக் கல்வி இயக்குநர் மதிவாணன், துணைவேந்தரின் மனைவி சொர்ணலதா ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

70-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனத்தில் விதிகளை மீறியும், லஞ்சம் வாங்கிக் கொண்டும் பணி நியமனங்கள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்த பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று, உதவிப் பேராசிரியர் பணிக்கான நேர்முகத் தேர்வில் கலந்துகொண்ட முன்னாள் மாணவர்களிடம் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேர்முகத் தேர்வை நடத்தியது யார், எத்தனை பேர் தேர்வை நடத்தினர், எந்த மாதிரியான கேள்விகளைக் கேட்டனர், நேர்முகத் தேர்வு முடிந்ததும் பணி நியமனம் வழங்குவதற்காக பேரம் பேசப்பட்டதா என்பது பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x