Published : 11 Feb 2018 07:25 AM
Last Updated : 11 Feb 2018 07:25 AM

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு திருப்பூரில் ரூ.65 லட்சம் நிதி

கொங்கு விளையாட்டுக் குழு திருப்பூர் மற்றும் கொங்கு மண்டல தமிழ் ஆர்வலர்கள் இணைந்து ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் விழா, திருப்பூர் கொங்கு விளையாட்டுக்குழு அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

டாப்லைட் குழும இயக்குநர் நா. வேலுச்சாமி வரவேற்றார். கோவை நன்னெறிக்கழகத்தின் என். சுப்பிரமணியம் தலைமை வகித்தார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழக பிரதிநிதி பேராசிரியர் பேச்சிமுத்து பேசினார்.

நிகழ்ச்சியில் கவிஞர் கவிதாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: ஒரு மொழியை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் எனில் அதற்கு 11 தகுதிகள் இருக்க வேண்டும். 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட்ட மொழி தமிழ். திருக்குறளில் இல்லாத கருத்துகளே இல்லை. அதேபோல் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என கணியன் பூங்குன்றனார் தெரிவித்துள்ளார். அதற்கு இணையான ஒரு சொல் உலகில் வேறெங்கும் இல்லை. தாய்க்கு செய்யத் தவறியவர்கள் தாய்மொழிக்கு செய்யுங்கள். நம் குழந்தைகள் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளட்டும். ஆனால், தாய் மொழியை கற்றுக்கொடுக்க தவற வேண்டாம். நம் குழந்தைகளுக்கு கலாச்சாரத்தை, பண்பாட்டை சொல்லித்தர வேண்டும். தமிழ் பாரம்பரியம் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை தரும் என்றார். நிகழ்ச்சியில், கொங்கு விளையாட்டு குழு திருப்பூர் மற்றும் கொங்கு மண்டல தமிழ் ஆர்வலர்கள் இணைந்து ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக ரூ.65 லட்சம் நிதியை கவிஞர் கவிதாசனிடம் வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x