Published : 11 Feb 2018 07:19 AM
Last Updated : 11 Feb 2018 07:19 AM

சமையல் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - காஸ் டேங்கர் லாரிகள் நாளை முதல் வேலைநிறுத்தம்

மண்டல அளவில் வாடகை ஒப்பந்தம் நடந்த வலியுறுத்தி தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நாளை (12-ம் தேதி) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தால் தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் சமையல் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்த காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இதற்காக ஒவ்வொரு 3 ஆண்டுக்கு ஒருமுறை ஆயில் நிறுவனங்கள் வாடகை ஒப்பந்தம் அறிவிக்கும். இந்த முறை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒரு வாடகை ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. மேலும் மண்டல முறையிலான ஒப்பந்த முறைக்குப் பதிலாக ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியே வாடகை ஒப்பந்தம் அறிவிக்கப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் அறிவித்தது. இதற்கு காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இச்சூழலில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக நேற்று நாமக்கல்லில் தென்மண் டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டம், அதன் தலைவர் பொன்னம்பலம் தலைமையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வாடகை ஒப்பந்த முறையில் பழைய நடைமுறையை செயல்படுத்த முடியாது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துவிட்டன. ஒப்பந்த தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டன. காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய மாநில அளவிலான வாடகை டெண்டர் நடைமுறையை திரும்பப்பெற வலியுறுத்தி வரும் 12-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்க உள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x