Last Updated : 05 Feb, 2018 08:11 PM

 

Published : 05 Feb 2018 08:11 PM
Last Updated : 05 Feb 2018 08:11 PM

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் நாளை (செவ்வாய்கிழமை) மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அகில இந்திய முக்கியத்துவம் வாய்ந்த புண்ணிய திருத்தலங்களில் ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் தலையாய திருத்தலமாகும். இந்தியாவில் உள்ள நான்கு முக்கியத் திருத்தலங்களான ராமேசுவரம், துவாரகா, பூரி, பத்ரிநாத் ஆகியவற்றில் தெற்கே அமைந்த சிவத்தலம் ராமேசுவரம் மட்டும் ஆகும். அதேபோல் பனிரெண்டு ஜோதிர்லிங்க திருத்தலங்களில் வடக்கெ பதினொன்றும் தெற்கே அமைந்துள்ள ராமேசுவரத்தில் தீர்த்தம், மூர்த்தி, தலம் ஆகிய முப்பெருமையுடை காசிக்கு நிகரான புண்ணிய திருத்தலமாக விளங்குகிறது.

ராம பிரான் (வைணவம்) ஈஸ்வரனை சிவலிங்க வடிவில் (சைவத்தை) பிரதிஷ்டை செய்தார் என்பதால் சைவ, வைணவ மதத்தினர் இருவரும் வந்து கூடி வழிபடும் இடமாகவும் இருப்பதால் இந்தியாவில் உள்ள இந்துக் கோயில்களில் ராமேசுவரம் மிக முக்கிய சிறப்பை பெற்றுள்ளது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலைப் பற்றி திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், தாயுமான சுவாமிகள் ஆகியோர் பாடி போற்றியுள்ளனர். இங்கு மாசி மாதத்தில் மகா சிவராத்திரியும், ஆடி மாதத்தில் திருக்கல்யாணமும், தைப்பூசத்தில் லட்சுமண தீர்த்தத்தில் தெப்பத் திருவிழாவும் முக்கியமான திருவிழாக்கள் ஆகும்.

இந்த ஆண்டிற்கான சிவராத்திரி திருவிழா இன்று பிப்ரவரி 6-ல் தொடங்கி பிப்ரவரி 17 வரை நடைபெறுகிறது.

செவ்வாய்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் மேஷ லக்னத்தில் கோயில் கொடிமரத்தில் திருவிழா கொடி ஏற்றப்படுகிறது. இதனையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறன. இரவு 8 மணிக்கு ராமநாதசுவாமி தங்க நந்திகேசுவரர் வாகனத்திலும், பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி வீதி உலா வருகிறார்கள்.

பிப்ரவரி 13-ல் மகா சிவராத்திரி

பிப்ரவரி 13-ம் தேதி மாசி சிவராத்திரியை முன்னிட்டு காலை 9 மணிக்கு மேல் நடராஜர் கேடயத்தில் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து கோயில் அனுப்பு மண்டபத்தில் பட்டயம் வாசித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு ஒளி வழிபாடு முடிந்ததும் சுவாமி அம்பாள் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் வீதி உலா வருகிறார்கள்.

பிப்ரவரி 14-ம் தேதி காலை 09.30 மணிக்கு சுவாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளுகிறார்கள். தொடர்ந்து தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.

மாசி அமாவாசை

பிப்ரவரி 15-ம் தேதி மாசி அமாவாசையன்று காலை 9 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் இந்திர விமானத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரைக்கு வந்து அங்கு பக்தர்களுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.

திருவிழாவையோட்டி தினமும் தெற்கு நந்தவன திருக்கல்யாண மண்டபத்தில் ஆன்மிக சொற்பொழிவு மற்றும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ராஜா குமரன் சேதுபதி, கோயில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி ஆகியோர் செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x