Published : 05 Feb 2018 03:37 PM
Last Updated : 05 Feb 2018 03:37 PM

பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் இடைநீக்கம் தாமதம்: அரசின் தயக்கத்தால் பல்கலைக்கழக பணிகள் முடக்கம்

ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்று கைதான துணைவேந்தரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அரசின் தாமதத்தால் பல்கலைக்கழகப் பணிகள் முடங்கியுள்ளன.

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ரூ.30 லட்சம் லஞ்சப் புகாரில் சிக்கி கைதாகியுள்ளார். 24 மணி நேரம் கடந்தால் அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்ற விதியிருந்தும் இதுவரை பணியிடை நீக்கம் செய்யாததால் பல்கலைக்கழகப் பணிகள் முடங்கியுள்ளன. பதிவாளர் உள்ளிட்டோர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இது குறித்து கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் வனிதா தலைமையில் சிண்டிகேட் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.

பதிவாளர் வனிதா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''துணை வேந்தர் மீதான கைது நடவடிக்கை, லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஆய்வு உள்ளிட்ட எதுவுமே பல்கலைக்கழகத்துக்கு அதிகாரபூர்வமாக எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. உயர் கல்வித் துறையில் இருந்தும் எந்த அறிவிப்பும் வரவில்லை. எல்லோரையும் போல நாங்களும் காத்திருக்கிறோம்'' என்று தெரிவித்தார்.

துணைவேந்தர் கணபதி கைதாகியுள்ளதால், அவரது பணிகள், பலகலைக்கழகத்தின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் முடங்கியுள்ளன. பல்கலைக்கழக நிறுவனர் தினம் இன்று நடக்க இருப்பதாக இருந்த நிலையில் துணைவேந்தர் கைது சம்பவத்தால் அந்த நிகழ்ச்சி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

துணைவேந்தர் தலைமையிலான அதிகாரபூர்வ சிண்டிகேட் கூட்டமும் உயர் கல்வித்துறை உத்தரவுக்குப் பிறகே நடக்கும் என கூறப்படுகிறது. அதன் பிறகே பதிவாளர் தலைமையில் சிண்டிகேட் கூட்டம் நடக்கும்.

இதனிடையே துணைவேந்தரைப் பணியிடை நீக்கம் செய்ய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x