Published : 05 Feb 2018 01:29 PM
Last Updated : 05 Feb 2018 01:29 PM

தன்யஸ்ரீ நலம் பெற பிரார்த்தனையோடு, பணமும் குவிகிறது: வாட்ஸ்அப் குரூப் மூலம் சேர்ந்த ரூ.15 லட்சம் நிதி

சென்னை தண்டையார்பேட்டையில் குடிபோதையில் மாடியில் இருந்து கீழே விழுந்த ஒருவர் சாலையில் நடந்து சென்ற சிறுமி தன்யஸ்ரீ மீது விழுந்தார்.

படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தன்யஸ்ரீக்கு பண உதவி கிடைத்து வருகிறது. அவர் நலம் பெற பல்வேறு இடங்களில் பிரார்த்தனையிலும் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் அருணகிரி. இவர் தனது பேத்தி தன்யஸ்ரீயை (வயது 4) அழைத்துக் கொண்டு கடந்த ஞாயிறு வீட்டருகே இருக்கும் பல்பொருள் அங்காடிக்குச் சென்றார்.

அப்போது, ஒரு வீட்டின் 2-வது மாடியில் இருந்து ஒருவர் குடிபோதையில் தவறி தன்யஸ்ரீயின் மீது விழுந்தார். இதில் குழந்தை தன்யஸ்ரீவுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக தண்டையார்பேட்டை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், காயம் அதிகமாக இருந்ததால் அங்கிருந்து அவர் க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தன்யஸ்ரீயின் நிலைமை குறித்து அறிந்த நல்ல உள்ளம் கொண்ட ஏராளமான மக்கள் அவரின் தந்தையைச் சந்தித்து சிகிச்சைக்காக பணஉதவி செய்து வருகின்றனர்.

தன்யஸ்ரீயின் உடல் நலம் குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், ''தன்யஸ்ரீக்கு மூளையில் சிறிய வீக்கமும், முதுகு தண்டுவடத்திலும், காலிலும் சிறிய அளவிலான எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. கடந்த புதன்கிழமை தன்யஸ்ரீக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது செயற்கை சுவாசத்தின் உதவியுடன் இருக்கிறார். இப்போது உடல்நலம் தேறிவரும் வரும் தன்யஸ்ரீ தனது பெற்றோருடன் பேசுகிறார்'' எனத் தெரிவித்தனர்.

இதற்கிடையே தன்யஸ்ரீ அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவரின் உடல்நிலை குறித்தும், சிகிச்சைக்கான பணம் திரட்டுவது குறித்தும் நினைத்து அவரின் தந்தை ஸ்ரீதரும், தாய் யமுனாதேவியும் மிகுந்த கலக்கத்திலும் வேதனையிலும் இருந்தனர். இவர்களின் கவலையையும், வேதனைகளையும் பல உதவும் உள்ளங்கள் போக்கி வருகிறார்கள்.

தன்யஸ்ரீயின் நிலை குறித்து அறிந்து ஏராளமானோர் பணஉதவி செய்து வருகிறார்கள். இது குறித்து தன்யஸ்ரீயின் மாமா சங்கர் கூறியதாவது:

தன்யஸ்ரீக்காக ஏராளமானோர் முகம் தெரியா நபர்கள் கூட பணம் அளித்து உதவுகிறார்கள். சிலர் தன்யஸ்ரீயின் தந்தையின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பியும், நேரில் வந்தும் கொடுத்து தங்களது அன்பையும், அக்கறையையும் வெளிப்படுத்தி வருகின்றனர். வழக்கமாக வாட்ஸ்அப்பில் வரும் இதுபோன்ற செய்திகளை போலி என்று மக்கள் நினைப்பார்கள். ஆனால், தன்யஸ்ரீ விஷயத்தில் மனிதநேயம் கொண்ட பலர் உதவிவருவது நெகிழ்ச்சி அளிக்கிறது'' என்றார்.

இதுதவிர வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சதீஸ்குமார் மோகன் என்பவர் மில்ஆப் மூலம் தன்யஸ்ரீக்காக ஒரு பிரச்சார இயக்கமே நடத்தி ரூ.15 லட்சம் நிதி திரட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ''நாங்கள் அந்தர்பாய்ஸ் எனும் வாட்ஸ் அப் குரூப் நடத்துகிறோம். அதில் 15க்கும் மேற்பட்ட நண்பர்கள் இருக்கிறோம். இந்த குரூப்பில் இருந்து தன்யஸ்ரீ குறித்த தகவல்களைப் பகிர்ந்து உதவி கோரி, பல்வேறு நண்பர்களிடம் இருந்து உதவியைப் பெற்றோம்.

இதற்கு முன் சென்னையில் வெள்ளம் சூழ்ந்தபோதும், எங்கள் வாட்ஸ் அப் குரூப் மூலம் பணம் திரட்டி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினோம். ஆனால், தன்யஸ்ரீ விஷயத்தில் இன்னும் ஏராளமாக பணத்தை திரட்டி அவர் உயிர் பிழைக்க உதவ வேண்டும் என நினைக்கிறோம்'' எனத் தெரிவித்தார்.

இதுதவிர தன்யஸ்ரீ உடல்நலம் பெற தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பலர் சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் செய்து தங்களின் மனித நேயத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தன்யஸ்ரீ உடல்நலம் தேறி, இயல்பு நிலைக்குத் திரும்பி மகிழ்ச்சியுடன் இருக்க நாமும் பிரார்த்திப்போம்.

தன்யஸ்ரீக்கு உதவ விரும்பும் மனங்கள் தன்யஸ்ரீயின் தந்தை ஸ்ரீதரின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பி உதவலாம்.

வங்கிக் கணக்கு தாரர் பெயர்: C.SRIDHAR

தன்யஸ்ரீயின் தந்தை ஸ்ரீதர் தொலைபேசி எண்: 70923 80119

வங்கிக் கணக்கு எண்- 6021553833

IFSC CODE NO: IDIB000W009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x