Published : 05 Feb 2018 10:53 AM
Last Updated : 05 Feb 2018 10:53 AM

பாரதியார் பல்கலைக்கழக ஊழல் விவகாரம்: அமைச்சர் அன்பழகனை கைது செய்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக: ராமதாஸ்

பல்கலைக்கழக ஊழலில் சுண்டெலிகளை பிடித்துவிட்டு பெருச்சாளிகளை விடுவது போல் அமைச்சரைக் காப்பாற்றும் முயற்சி நடக்கிறது. அமைச்சரையும் கைது செய்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

“கோவை பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் பணி நியமன ஊழலில் துணைவேந்தர் கணபதியைத் தொடர்ந்து மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தை பல்கலைக்கழகத்தின் வளாகத்துடன் முடித்து விட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஊழலின் முழுப் பரிமாணமும் வெளிக்கொண்டு வரப்படுவதை தடுக்க ஆட்சியாளர்களே முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கதாகும்.

பேராசிரியர் பணி நியமனத்திற்காக ரூ.30 லட்சம் கையூட்டு வாங்கும் போது கையும், களவுமாக கைது செய்யப்பட்ட துணை வேந்தர் கணபதி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த ஊழலுக்கு தரகராக செயல்பட்ட வேதியியல் பேராசிரியர் தர்மராஜ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இன்னொரு தரகராக செயல்பட்ட தொலைதூரக்கல்வி இயக்குனரும் கணபதியின் உறவினருமான மதிவாணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதிவாணன், துணைவேந்தரின் மனைவி சுவர்ணலதா ஆகியோரை காவல் துறையினர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழல்கள் பற்றி அதிர்ச்சியான தகவல்களை காவல்துறை விசாரணையில் துணைவேந்தர் கணபதி தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

பேராசிரியர் நியமன ஊழல்கள் தொடர்பாக துணைவேந்தர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் ஆசிரியர் நிலையில் உள்ளவர்களை கைது செய்து வரும் காவல்துறையினர், இந்த ஊழலில் அதிகாரப் படிநிலையின் உச்சத்தில் இருப்பவர்களை மட்டும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக 2016-ம் ஆண்டில் அப்போதைய உயர்கல்வி அமைச்சர் பழனியப்பனுக்கு ரூ.8 கோடி கொடுத்ததாக கணபதி கூறியிருக்கிறார்.

அதுமட்டுமின்றி, பேராசிரியர்கள் பணி நியமனத்தில் கையூட்டாக வாங்கப்பட்ட தொகையில் ஒரு பகுதியை இப்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கும், இன்னொரு பகுதியை தேர்வுக்குழுவில் அரசாங்க பிரதிநிதியாக இடம்பெற்றிருந்த பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதனுக்கும் கொடுத்ததாகக் கூறியதாகத் தெரிகிறது. ஆனால், இந்தத் தகவல்களின் அடிப்படையில் கையூட்டுத் தடுப்புப் பிரிவினர் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

மாறாக அமைச்சர் அன்பழகனையும், எடப்பாடி ஆசி பெற்ற முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதனையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மற்றொருபுறம் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இதுவரை பணி நீக்கமோ அல்லது பணியிடை நீக்கமோ செய்யப்படவில்லை. அரசு அதிகாரிகளாக இருப்பவர்கள் ஏதேனும் வழக்கில் கைது செய்யப்பட்டு 24 மணி நேரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால் அவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்பது விதியாகும்.

ஆனால், கணபதி சிறையில் அடைக்கப்பட்டு இரு நாட்களாகியும் அவர் இடைநீக்கம் செய்யப்படாதது இவ்வழக்கு எந்த திசையில் பயணிக்கும் என்பது குறித்து எதிர்மறையான யூகங்களை ஏற்படுத்துகிறது. பாரதியார் பல்கலைக்கழக நியமன ஊழல் என்பது புதிதாக முளைத்த விஷயமல்ல. 20 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருவது தான். இந்த ஊழலில் முழுப்பரிமாணத்தையும் வெளிக்கொண்டு வந்து, அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் தண்டிப்பது தான் உயர்கல்வித்துறையை தூய்மைப்படுத்த உதவும்.

மாறாக, பல்கலைக்கழக ஊழலில் சுண்டெலிகளை பிடித்து விட்டு, பெருச்சாளிகளை மிகவும் சுதந்திரமாக நடமாட அனுமதிப்பது புதுப்புது வடிவங்களில் ஊழல்கள் தலையெடுத்து தழைத்தோங்கவே உதவும். பாரதியார் பல்கலைக்கழகம் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஊழல்கள் தலைவிரித்தாடுகின்றன. அனைத்துக்கும் மூலமாக இருப்பதும், இருந்ததும் உயர்கல்வித்துறை அமைச்சர்கள் தான். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் பல்கலைக்கழக ஊழல்களை களைய முடியாது.

எனவே, தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தை தூய்மைப்படுத்துவதற்காக, 1. பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். 2. பாரதியார் பல்கலைக்கழக ஊழலில் சம்பந்தப்பட்ட உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் மீது ஊழல் வழக்கு பதிவு செய்து அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். 3. பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம், பேராசிரியர்கள் நியமனம், கொள்முதல் மற்றும் கட்டுமான ஒப்பந்தம் வழங்குவதற்கு வெளிப்படையான புதிய முறை உருவாக்கப்பட வேண்டும்.

4. பல்கலைக்கழக ஊழல்களின் முழுப் பரிமாணத்தையும் வெளிக்கொண்டு வருவதற்காக மத்திய புலனாய்வுப் பிரிவின் சிறப்பு புலனாய்வுக் குழு (CBI- SIT) விசாரணைக்கு ஆளுநர் ஆணையிட வேண்டும். இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசும், ஆளுநர் மாளிகையும் தாமதம் செய்தால் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்.”

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x