Published : 05 Feb 2018 10:04 AM
Last Updated : 05 Feb 2018 10:04 AM

பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் 100-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் ரத்து: விடுமுறை நாள் என்பதால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு

பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் மார்க்கத்தில் நேற்று ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

சென்னை ரயில் கோட்டத்தில் தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி வழித்தடங்களில் தினந்தோறும் 670 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் 602 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. பஸ் கட்டண உயர்வுக்கு பிறகு மின்சார ரயிகளில் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், விடுமுறை நாட்களி லும் ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்நிலையில் சென்னை ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் மார்க்கத்தில் நேற்று 100-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக, சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே அதிகாலை முதல் மதியம் 2 மணி வரையில் மின்சார ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டது. மின்சார ரயில்கள் வழக்கத்தை விட நேற்று குறைவாகவே இயக்கப்பட்டன. இதனால் தாம்பரம், மாம்பலம், நுங்கம்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் மக்கள் மின்சார ரயில்களுக்காக சுமார் 45 நிமிடங்கள் வரை காத்திருந்தனர். சென்னை கடற்கரைக்கு இயக்க வேண்டிய மின்சார ரயில்களும் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்பட்டதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் சென்னை எழும்பூரில் டிக்கெட் கவுன்ட்டர்கள் குறைந்த அளவிலேயே இயங்கியதால், பயணி கள் டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இது தொடர்பாக ரயில் பயணிகள் சிலர் கூறும்போது, “பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்களின் சேவை அடிக்கடி நிறுத்தப்படுகிறது. பராமரிப்பு பணி மற்றும் ரயில்சேவை ரத்து போன்ற தகவல்களை ஒரு வாரத்துக்கு முன்பே அறிவிக்க வேண்டும். மேலும், அந்த நாட்களில் கூடுதலாக மாநகர பஸ்களை இயக்குமாறு மாநகர போக்கு வரத்து கழகத்திடம் தெற்கு ரயில்வே தெரிவித்தால், பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள தாக இருக்கும். பராமரிப்பு பணியால் ரயில் சேவைகள் நிறுத்தம் என இன்று (நேற்று) செய்தி வெளியிட்டால், பயணி கள் எப்படி தங்களது பயணத்தை திட்டமிட முடியும்” என்றனர்.

அதிகாரிகள் விளக்கம்

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ரயில் பாதைகள் பராமரிப்பு பணியால் ரயில் சேவையில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. அரசு பஸ் தொழிலாளர்கள் போராட்டத்தின் போது, 2 வாரங்களுக்கு ரயில் பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன. மேலும், முழு அளவில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால், வழக்கமாக நடைபெறும் பராமரிப்பு பணியின் அளவும் தற்போது கூடியுள்ளது. எப்போதாவது, ஒருமுறை இப்படி தவிர்க்க முடியாத சூழல் ஏற்படும். பாதுகாப்பான பயணம் முக்கியம் என்பதால், பராமரிப்பு பணி என்பது தவிர்க்க முடியாது. இதற்கு பயணிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x