Published : 05 Feb 2018 09:33 AM
Last Updated : 05 Feb 2018 09:33 AM
பொள்ளாச்சி அருகே தனியார் தோட்டத்து வேலியில் சிக்கி வலியால் துடித்த கடமான், 2 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் வனத்துறையினரால் காயமின்றி மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
பொள்ளாச்சியை அடுத்த எட்டித்துறை கிராமத்தில் வனப்பகுதிக்கு அருகே தனியாருக்கு சொந்தமான மாந்தோப்பு உள்ளது. நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து நீர் தேடி சுமார் 5 வயதுடைய ஆண் கடமான் தோட்டப் பகுதிக்கு வந்துள்ளது. அப்போது தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலியில், எதிர்பாராதவிதமாக கடமானின் கொம்பு மாட்டிக்கொண்டது. இதனால் தப்பிச் செல்ல முடியாமல் கடமான் வலியால் சத்தமிட்டப்படி தவித்து வந்தது.
இது குறித்து பொள்ளாச்சி வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற வனச்சரக அலுவலர் காசிலிங்கம், வனவர் சரண்யா, வன காப்பாளர் மாரிமுத்து, கதிர்வேல் ஆகியோர் கொண்ட குழுவினர், கடமானை மீட்கும் பணியில் ஈடுபட தொடங்கினர். 2 மணி நேரப் போராட்டத்துக்கு பின்னர், கடமானை முழுமையாக கம்பிவேலியில் இருந்து மீட்டனர். மீட்கப்பட்ட கடமான் மாங்கரை வனப்பகுதியில் உள்ள உப்பாறு அருகில் விடுவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT