Published : 05 Feb 2018 08:31 AM
Last Updated : 05 Feb 2018 08:31 AM

வெவ்வேறு சாலை விபத்துகளில் 4 பேர் பலி

மாமல்லபுரம், உத்திரமேரூர் ஆகிய பகுதியில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 4 பேர் இறந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் மீனவ குப்பம் பகுதியைச் சேர்ந்த கடும்பாடி என்பவரின் மகன் மனோஜ்(18). இவர், பூஞ்சேரியைச் சேர்ந்த நண்பர் அஜித்(18) என்பவருடன், இருசக்கர வாகனத்தில் ஈசிஆர் சாலையில் மாமல்லபுரம் நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்போது, சூலேரிக்காட்டு குப்பம் பகுதியில் முன்னால் சென்ற சுற்றுலா வாகனம் திடீரென திரும்பியதாக கூறப்படுகிறது. அப்போது, இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதியதாகத் தெரிகிறது. இதில், பலத்த காயமடைந்த மனோஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.

இதேபோல், கூவத்தூரை அடுத்த குண்டுமணிச்சேரியை சேர்ந்தவர் கணேசன்(55). இவர், கடலூர் கிராமத்தை சேர்ந்த மேகவன்(55) என்பவருடன் இருசக்கர வாகனத்தில், ஈசிஆர் சாலையில் கூவத்தூரை நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்போது, இளந்தோப்பு அருகே அச்சாலையில் வந்த தனியார் வேன் ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீஸார், காயமடைந்த நபரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

உத்திரமேரூரை அடுத்த நெல்வாய் பகுதியை சேர்ந்த தாண்டவராயன் மகன் சுதாகர்(25). இவர், பணி முடித்து வீடு திரும்புவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கடல்மங்கலம் அருகே இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கேளம்பாக்கத்தை அடுத்த படூர் கிராமத்தைத் சேர்ந்த ஆறுமுகம் மகன் விஜயகுமார்(24). இவர், கேளம்பாக்கத்திலிருந்து பைக்கில் வண்டலூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது, கேளம்பாக்கம் இணைப்பு சாலை பகுதியில் மாடு குறுக்கே வந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். பின்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x