Published : 05 Feb 2018 08:19 AM
Last Updated : 05 Feb 2018 08:19 AM

பயணத்தின்போது பொருட்கள் சேதம்: சரக்கு போக்குவரத்து நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு- நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

பயணத்தின்போது வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடையக் காரணமான சரக்கு போக்குவரத்து நிறுவனம், வாடிக்கையாளருக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த எஸ்.சுரேஷ்குமார் சென்னை மாவட்ட (தெற்கு) நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியது: சென்னையில் உள்ள எனது வீட்டு உபயோகப் பொருட்களை கர்நாடக மாநிலம் பங்காரப்பேட் பகுதிக்கு இடம் மாற்ற ‘தங்கம் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்’ எனும் தனியார் சரக்கு போக்குவரத்து நிறுவனத்துக்கு ரூ.8,200 கட்டணம் செலுத்தினேன். அவர்கள் எனது பொருட்களை 2007 ஏப்ரல் 22-ம் தேதி கொண்டு சேர்ப்பதாகத் தெரிவித்தனர்.

சேவை குறைபாடு

ஆனால், ஏப்ரல் 23-ம் தேதிதான் கொண்டுசேர்த்தனர். மேலும், பயணத்தின்போது 50 சதவீத பொருட்கள் சேதமடைந்தன. இதுதொடர்பாக பலமுறை கேட்டும் சேதமானப் பொருட்களுக்கு போக்குவரத்து நிறுவனத்தினர் எனக்கு எந்தவித இழப்பீடும் அளிக்கவில்லை. இது சேவைக் குறைபாடாகும். எனவே, எனக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை மாவட்ட (தெற்கு) நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் தலைவர் எம்.மோனி, உறுப்பினர்கள் கே.அமலா, டி.பால்ராஜசேகரன் ஆகியோர், “மனுதாரர் 50 சதவீத பொருட்கள் சேதமானதாகத் தெரிவித்துள்ளார். பொருட்கள் சேதமானது குறித்து எந்தவித ரசீதையும் அவர் சமர்ப்பிக்கவில்லை. எனவே, இந்த நிறுவனம், மனுதாரருக்கு, சேதமான பொருட்களுக்காக ரூ.10,000, வழக்கு செலவாக ரூ.5,000 அளிக்கவேண்டும்” என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x