Published : 05 Feb 2018 08:07 AM
Last Updated : 05 Feb 2018 08:07 AM

திருச்சியில் ரவுடி கொலை: முன்னாள் சபாநாயகர் கொலையில் தொடர்புடையவர்

புதுச்சேரி முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் சிவக்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி திருச்சியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

திருச்சி மேல வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முத்துவேல் மகன் தேவா(எ) வாசுதேவன்(29). ரவுடியான இவர் மீது, திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களில் அடிதடி, வழிப்பறி, கொள்ளை வழக்குகள் உள்ளன.

மேலும், 2017-ல் காரைக்கால் அருகே நிரவியில் புதுச்சேரி முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் சிவக்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல சாராய வியாபாரி ராமுவின் 2-வது மனைவி எழிலரசி, தேவா உள்ளிட்டோர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். தலைமறைவாக இருந்த தேவாவை, வழிப்பறி வழக்கு ஒன்றில் 2017-ல் திருச்சி உறையூர் போலீஸார் கைது செய்தனர். பின்னர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு காரைக்கால் சிறையில் அடைக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன்பு குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு, சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருச்சி புத்தூர் திடீர் நகரில் அவரை ஒரு கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டியது. இதில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் இறந்தார். இதுகுறித்து புத்தூர் அரசு மருத்துவமனை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தேவாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பழிவாங்கும் நடவடிக்கையா?

புதுச்சேரி முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால், அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த கொலை நிகழ்ந்துள்ளதா அல்லது கடந்தாண்டு வண்ணாரப்பேட்டை பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவின்போது ஆட்டோ ஓட்டுநர் பிரபு என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கில், பழிவாங்கும் நோக்கில் இக்கொலை நடந்ததா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக பிரபு என்பவர் உட்பட 5 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையான தேவா 2017 மட்டுமின்றி, 2011, 2016-ம் ஆண்டுகளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x