Published : 05 Feb 2018 08:05 AM
Last Updated : 05 Feb 2018 08:05 AM

அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால்தான் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியும்: அமைச்சர் செல்லூர் ராஜு திட்டவட்டம்

அதிமுக உறுப்பினர் அட்டை முக்கியமானது. இந்த அட்டை இருந்தால்தான் அரசின் நலத் திட்ட உதவிகளை பெற முடியும் என அமைச்சர் செல்லூர் கே.ராஜு திட்டவட்டமாக தெரிவித்தார்.

மதுரையில் நகர் மாவட்ட அதிமுக சார்பில், உறுப்பினர்களுக்கான படிவம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிர்வாகிகளிடம் உறுப்பினர் படிவங்களை வழங்கி, நகர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான செல்லூர் கே.ராஜு பேசியதாவது:

அதிமுக யாராலும் அசைக்க முடியாத ஆலமரம். ஜெயலலிதா விட்டுச் சென்ற பாதையில் கட்சியையும், ஆட்சியையும் முதல்வர் கே. பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நடத்தி வருகின்றனர். அதிமுக ஆட்சி தொடர்ந்து நீடிக்கும்.

நூறு சதவீத வெற்றி

அதிமுகவை அழிக்க நினைக்கும் மு.க.ஸ்டாலினின் கனவு பலிக்காது. உள்ளாட்சித் தேர்தலிலும், அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக நூறு சதவீத வெற்றியை பெறும்.

அதிமுகவினர் அனைவரும் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். அதிமுக உறுப்பினர் அட்டை உயிர் நாடி. இந்த அட்டை இருந்தால்தான் அரசின் உதவிகளை பெற முடியும். அதிமுக உறுப்பினர் சேர்க்கையில், மதுரை நகர் மாவட்டம் முன்னோடியாக இருக்க வேண்டும் என்று அவர் பேசினார்.

தேர்தலை சந்திக்க தயார்

நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் மேலும் கூறியதாவது:

அதிமுக தேர்தலை பார்த்து பயப்படும் கட்சி அல்ல. எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். காவிரி நதி நீர் விவகாரத்தில், தமிழக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்படும். கமல் உள்ளிட்ட நடிகர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம். ஆனால், ட்விட்டர் மற்றும் ஊடகம் வழியே மட்டும் பேசாமல் மக்களை நேரில் சந்தித்தால்தான் தெரியும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x