Published : 05 Feb 2018 07:48 AM
Last Updated : 05 Feb 2018 07:48 AM

அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரிப்பு: சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதர் தகவல்

கடந்த 16 ஆண்டுகளில், அமெரிக்கா சென்று படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளதாக சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதர் ராபர்ட் பர்ஜெஸ் தெரிவித்தார்.

‘தி இந்து சர்வதேச உயர்கல்வி வழிகாட்டி கண்காட்சி’, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் ஹோட்டலில் நேற்று தொடங்கியது. இந்த 2 நாள் கல்விக் கண்காட்சியை அமெரிக்க துணை தூதர் ராபர்ட் பர்ஜெஸ் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் இந்திய மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இளங்கலை பட்டப் படிப்பு படிப்பவர்கள். கடந்த 16 ஆண்டுகளில், அமெரிக்கா சென்று படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. அமெரிக்காவிலோ, வேறு நாடுகளிலோ படிக்கும் போது மாணவர்களின் தலைமைப்பண்பு வளரும். அதோடு புதுமையான அனுபவங்களை யும் பெறலாம். தற்போதைய சூழலில், உலகமே ஒரு கிராமமாக ஆகிவிட்ட நிலையில், வெளிநாட்டு அனுபவம் மாணவர்களுக்குப் பெரிதும் உதவும்.

திடீரென வேறொரு நாட்டுக்குச் சென்று படிப்பது சற்று கடினமாக தோன்றலாம். ஆனால், புதிய கலாச்சாரம், புதிய கல்விச் சூழல் என அத னால் கிடைக்கும் பயன்கள் அதிகம். பல்வேறு கலாச்சாரங்களை தெரிந்துகொள்வது புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். அமெரிக்காவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் வாய்ப்புகளையும் வழங்கி வருகிறோம். தற்போது, உயர்கல்வி வளர்ச்சிக்கு அமெரிக்கா அதிக முக்கியத்துவம் அளித்து வருவதால் இந்திய - அமெரிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்த இதுவே சரியான நேரம்.

இவ்வாறு அவர் பேசினார்.

‘இந்து’ என்.ராம் பேசும்போது, “வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தேவைப்படும் சரியான தகவல்கள், வாய்ப்புகளை அளிக்கும் நோக்கத்தில் இந்த கல்வி கண்காட்சி நடத்தப்படுகிறது. ‘தி இந்து’ ஒரு தேசிய நாளிதழாக இருப்பதால் கல்விக்கு அனைத்து நிலைகளிலும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். நாட்டின் சமூக பாதுகாப்பில் கல்வியும் மருத்துவமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொருளாதார வாய்ப்புகளின் பயன்களை அடைய விரும்பும் மாணவர்களுக்கு கல்வி மிகவும் முக்கியம்” என்றார்.

இக்கண்காட்சிக்கு பெற்றோருடன் வந்திருந்த மாணவ, மாணவிகள் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மேற்படிப்பு படிப்பது தொடர்பாக அந்நாட்டு கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர். இந்த கல்விக் கண்காட்சி இன்று (திங்கள்) நிறைவடைகிறது. காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை கண்காட்சி நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x