Published : 01 Feb 2018 03:15 PM
Last Updated : 01 Feb 2018 03:15 PM

திமுக தொண்டர்கள் குறைகளைச் சொல்ல தீர்வுகாணும் பெட்டி: ஸ்டாலின் தலைமையில் கள ஆய்வுக் கூட்டம் தொடங்கியது

திமுக தொண்டர்கள் குறைகளை ரகசிய கடிதமாக தெரிவிப்பதற்கு வாய்ப்பளிக்க, இன்று அண்ணா அறிவாலயத்தில் கள ஆய்வுக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.

அண்ணா அறிவாலயத்தில் இன்று முதல் கள ஆய்வுக் கூட்டம் தொடங்குகிறது. மாவட்டவாரியாக ஒவ்வொரு நாளும் நடைபெறவுள்ள கள ஆய்வில், ஸ்டாலின் நேரடியாக கலந்துகொண்டு குறைகளைக் கேட்க உள்ளார்.

பிப்ரவரி 1-ம் தேதி இன்று முதல் மார்ச் 22-ம் தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. இன்று தொடங்கிய கூட்டத்தில் பொதுச் செயலாளர் அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உள்ளிட்டோர் மு.க.ஸ்டாலினுடன் பங்கேற்றனர்.

கள ஆய்வுக் கூட்டம் குறித்து ஏற்கெனவே ஸ்டாலின் கூறியிருந்ததாவது:

''ஊடகங்களின் கருத்துகளும், கணிப்புகளும் திமுகவை மையப்படுத்தியே வெளியிடப்படுகின்றன. எல்லாருடைய கண்ணும் - கருத்தும் நம்மை நோக்கியே இருக்கின்றன.

கட்சியின் ஜனநாயகப் பாதையில் ஏற்படும் சிறுசிறு தடைகளை அகற்றி, வழக்கம்போல விரைந்து பயணித்து, வெற்றி இலக்கினை அடைவதற்கு ஏதுவாக, தடைக்கற்களின் அளவும் இயல்பும் என்ன, அணிவகுத்து விரைந்து செல்ல ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு கட்டத்திலும் எந்தமாதிரியான உத்திகளைக் கையாள வேண்டும் என்பன போன்றவற்றைக் கலந்தாலோசித்து வடிவமைத்துக் கொள்வதற்காகவே, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் களஆய்வு திட்டமிடப்பட்டு, கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் நாம் செய்ய வேண்டிய கட்சிப் பணிகள் குறித்தும், அதற்கான செயல்திட்டங்களை உருவாக்குவதற்கும் இந்தக் களஆய்வு துணை நிற்க வேண்டும்.''

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

திமுக தலைமை வெளியிட்டுள்ள அட்டவணையின் அடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்தைச் சார்ந்த ஊராட்சிச் செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், வட்டச்செயலாளர்கள், அந்தந்த மாவட்டத்தில் உள்ள துணை அமைப்புகளுடைய அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் என்ற வரிசையில் சந்திப்பு நடைபெறுகிறது.

பின்னர் ஒன்றிய – நகர - பகுதி திமுக செயலாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடனான சந்திப்பும் கலந்துரையாடலும் நடைபெற இருக்கிறது.

இந்தக் களஆய்வுக் கூட்டத்தில் நிர்வாகிகள் பொறுப்பு வகிக்கும் பகுதியில், அவர்கள் சார்ந்த மாவட்டத்தில் உள்ள கட்சியின் நிலையைப் பற்றித் தெரிவிக்க விரும்பும் புகார்கள் / கருத்துகள் / ஆலோசனைகளை எல்லாம் சிறு கடிதமாக எழுதி, கள ஆய்வு நடக்கும் இடத்தில் வைக்கப்படும் ரகசியப் பெட்டியில் போடலாம். அந்தக் கடிதங்களை ஆய்வு செய்ய, ஸ்டாலின் கட்டுப்பாட்டில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும்.

ரகசியமாக தீர்வு காணும் பெட்டியில் போடப்படும் கடிதங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகளின் அடிப்படையில், கட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்கபூர்வமான செயல்பாடுகளையும், அவசியமாகச் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை முறைகளையும் நிச்சயம் மேற்கொள்ள உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடிதம் மட்டுமின்றி, பேச்சு மூலமாகவும் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு இந்தக் கள ஆய்வு சந்திப்பில் வாய்ப்பளிக்கப்படுகிறது. நிறைகள் – குறைகள் கட்சி குறித்த உணர்வுகள் எல்லாம் நேரடியாக எடுத்துச் சொல்ல இந்தக் கூட்டத்தில் வாய்ப்பளிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x