Published : 01 Feb 2018 11:22 AM
Last Updated : 01 Feb 2018 11:22 AM

திருச்செந்தூர், பழநி, திருத்தணி உள்ளிட்ட முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா கோலாகலம்: விண்ணைப் பிளந்தது பக்தர்களின் ‘அரோகரா’ முழக்கம்

திருச்செந்தூர், பழநி, திருத்தணி உட்பட தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் நேற்று தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டா டப்பட்டது.

திருச்செந்தூரில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி அலைவாயு கந்தப் பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து அஷ்திரதேவருக்கு கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் உச்சிகால தீபாராதனை முடிந்ததும், சுவாமி அலை வாயு கந்தப் பெருமான் எழுந்தருளி சன்னதி தெரு வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள தைப் பூச மண்டபத்துக்கு வந்து பக்தர் களுக்கு காட்சியளித்தார்.

தைப்பூச மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னர் சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி உள்மாடவீதிகள், ரத வீதிகள், மூல ரதவீதியைச் சுற்றி கோயில் வந்தடைந்தார்.

சந்திர கிரகணத்தை முன்னிட்டு மாலை 4.15 மணிக்கு மூலவருக்கு பட்டுச் சாத்தப்பட்டு, நடை சாத்தப்பட்டது. சந்திர கிரகணம் முடிந்த பின்னர் இரவு 9.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மீண்டும் பூஜைகள் வழக்கம் போல் நடைபெற்றன.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புஷ்ப காவடி, கரும்பு காவடி, மயில் இறகு காவடி உள்ளிட்ட பல்வேறு வகை காவடி களை எடுத்தும், அலகு குத்தியும் திருச்செந்தூரில் குவிந்தனர்.

நேற்று அதிகாலை கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவையொட்டிதிருச்செந்தூருக்கு சிறப்பு பேருந் துகள் இயக்கப்பட்டன.

இதேபோன்று பழநியில் நடைபெற்ற தைப்பூச விழா தேரோட்டத்தில் அரோகரா கோஷம் முழங்க ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பழநி முருகன் கோயிலில் ஜனவரி 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா தொடங்கி 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.

இவ்விழாவின் 7-ம் நாளான நேற்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது.

‘அரோகரா’ முழக்கம்

தேரோட்டத்துக்கு முன்னதாக சண்முகநதியில் முத்துக்குமாரசுவாமி எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி தேரில் எழுந்தருளினர். காலை 10.45 மணிக்கு பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து இழுக்க, தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தது.

வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆர்வமுடன் கண்டு தரிசனம் செய்தனர். பகல் 12 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.

பழநி மலையடிவாரத்தில் கிரிவீதிகளில் காவடி எடுத்து ஆடியும், பக்திப் பாடல்களை பாடியும் தைப்பூச திருவிழாவை பக்தர்கள் கொண்டாடினர்.

தேரோட்டத்தில் கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா, திண்டுக்கல் எஸ்பி சக்திவேல், செந்தில்குமார் எம்எல்ஏ உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோன்று, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, சென்னை வடபழனி உட்பட தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையில் தொடங்கி நீண்ட வரிசையில் காத்திருந்து, காவடி எடுத்தும் அலகு குத்தியும் முருகப் பெருமானை தரிசித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x