Published : 01 Feb 2018 10:49 AM
Last Updated : 01 Feb 2018 10:49 AM

பள்ளி ஆண்டு விளையாட்டு விழாவில் காஸ் சிலிண்டர் வெடித்து பிளஸ் 2 மாணவர் உயிரிழப்பு: பள்ளி தாளாளர் உட்பட இருவர் கைது

வேலூரில் தனியார் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழாவில் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் பிளஸ் 2 மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு மாணவர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக, பள்ளி தாளாளர் உட்பட இருவரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது :

வேலூர் சத்துவாச்சாரி அடுத்த வள்ளலார் பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா பாகாயம் சிஎம்சி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் 600 மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். பல்வேறு நிகழ்ச்சி கள் நடந்தது, இந் நிலையில், மாலை 4 மணிக்கு காஸ் சிலிண் டர் மூலம் பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி நடந்தது.

அப்போது, எதிர்பாராதவிதமாக காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் பிளஸ் 2 மாணவர்கள் 2 பேர் தூக்கி வீசப்பட்டனர். இதில், சைதாப்பேட்டை தோப்பாசாமி தெருவைச் சேர்ந்த ஜித்தேஷ் (17) என்ற மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த சைதாப்பேட்டை கே.எஸ்.செட்டித் தெருவைச் சேர்ந்த நவீன் (17) என்பவரை, பெற்றோர் மீட்டு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். காஸ் சிலிண்டர் வெடித்து சிதறிய சத்தம் 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு கேட்டதால் பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

தகவலறிந்த வேலூர் வட்டாட்சியர் பாலாஜி, வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியம், பாகாயம் காவல் ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் காவல் துறையினர் வந்து விசாரணை நடத்தினர். அப்போது, மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் செய்யவில்லை என்று பெற்றோர் குற்றஞ் சாட்டினர்.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த பாகாயம் காவல் துறையினர் பள்ளித் தாளாளர் திருநாவுக்கரசு (66) மற்றும் காஸ் சிலிண்டரை இயக்கிய கருகம்பத்தூர் முருகன் கோயில் தெருவைச் சேர்ந்த கணபதி (37) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x