Published : 01 Feb 2018 10:52 AM
Last Updated : 01 Feb 2018 10:52 AM

நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டும்: முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரைச் சந்தித்து நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு பெறும் மசோதாவுக்கு ஒப்புதல் பெற வேண்டும் என்று முதல்வர் கே.பழனிசாமிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கடந்த ஆண்டு நீட் தேர்வு நடத்தப்பட்டதால் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்கள் மருத்துவராகும் வாய்ப்புகள் பறிக்கப்பட்டன. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயங்களில் இருந்து மருத்துவர்கள் உருவாகி விடக் கூடாது என்ற ஒரே உள்நோக்கத்துடனும், சதி எண்ணத்துடனும் மத்திய பாஜக அரசு நீட் தேர்வை திணித்துள்ளது. இதனால் தமிழக மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி எட்டாக் கனியாக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் சட்டப்பேரவையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. ஆனாலும், இதற்கு இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. நீட் தேர்வில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு கேள்வித்தாளை வெளியிட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு குட்டு வாங்கியது. தற்போது நாடு முழுவதும் ஒரே கேள்வித் தாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் மாநில பாடத் திட்டங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருந்தார். ஆனால், மூன்றே நாட்களில் இதனை சிபிஎஸ்இ மறுத்துள்ளது. இதன் மூலம் மாநிலங்களை சிறுமைப்படுத்தி, கல்வியை முற்றிலும் தங்கள் அதிகார வளையத்துக்குள் கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

பிப்ரவரி மாதம் தொடங்கியும் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படவில்லை. ஆரம்பிக்கப்பட்ட சில நீட் பயிற்சி மையங்களிலும் தனியார் நிறுவனங்களுக்கு இணையான பயிற்சி இல்லை என பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வரும் மே 6-ம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ளது. எனவே, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் பெற அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை முதல்வர் பழனிசாமி நேரில் சந்தித்து முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x