Published : 01 Feb 2018 10:41 AM
Last Updated : 01 Feb 2018 10:41 AM

புதுக்கோட்டையில் லாரியில் விழுந்த இரு பெண்களை காப்பாற்றிய ஓட்டுநருக்கு பாராட்டு

புதுக்கோட்டையில் சாலையில் சென்ற லாரியில் ஸ்கூட்டருடன் தவறி விழுந்த இரு பெண்களை விபத்தின்றி காப்பாற்றிய லாரி ஓட்டுநருக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் எஸ்.பாஸ்கர்(47). லாரி ஓட்டுநர். இவர், புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் வழியாக அண்மையில் லாரியை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஸ்கூட்டரில் சென்ற புதுக்கோட்டை, கணக்கம்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சங்கவி, அவரது தோழி ராணி ஆகிய இருவரும் லாரியில் தவறி விழுந்தனர்.

இதையறிந்த ஓட்டுநர் பாஸ்கர், விவேகமாகவும் விரைவாகவும் செயல்பட்டு, லாரியை உடனடியாக நிறுத்தினார். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் நின்றிருந்தோர் லாரிக்குள் சக்கரத்தின் அருகே விழுந்து கிடந்த இருவரையும் மீட்டனர். ஓட்டுநர் பாஸ்கரை பொதுமக்கள் பாராட்டினர்.

இந்நிலையில், புதுக்கோட்டைக்கு நேற்று சுமை ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் பாஸ்கருக்கு புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாலசுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்து பொன்னாடை அணிவித்தார். அப்போது, மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தாமரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x