Published : 01 Feb 2018 10:28 AM
Last Updated : 01 Feb 2018 10:28 AM
நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட்டால் முல்லை பெரியாறு அணை இடிந்துவிடக் கூடிய அபாயம் உள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
தேனி மாவட்டம் தேவாரம் அருகேயுள்ள பொட்டிபுரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் சுரங்கப்பாதை அமைத்து நியூட்ரினோ அறிவியல் ஆய்வுக் கூடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து தேனியில் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட்டால், இப்பகுதியில் உள்ள முல்லை பெரியாறு, கேரளத்தின் இடுக்கி அணை ஆகியவை இடிந்துவிடக் கூடிய ஆபத்து உள்ளது.
கேரளாவில் இருந்து குஜராத் வரை மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. ஏன் அங்கெல்லாம் இந்த திட்டத்துக்கு இடம் தேர்வு செய்யப்படவில்லை. நியூட்ரினோ திட்டத்தை குஜராத்தில் செயல்படுத்த வேண்டியது தானே. இந்தியாவை வல்லரசாக்க தமிழகம் என்ன பரிசோதனைக்கூடமா? துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை செல்போனில் தொடர்பு கொண்டு இந்த திட்டத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து பேசியுள்ளேன். இது சம்பந்தமான குறிப்புகளை அனுப்பிவைக்குமாறு அவர் கூறியுள்ளார்.
இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு மத்திய அரசு கடும் நெருக்கடியை தருகிறது. அமெரிக்கா கொடுக்கும் அழுத்தம்தான் இதற்கு காரணம்.
எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக பாடுபடுகின்ற அமைப்புகள் ஒன்று சேர்ந்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கியுள்ளோம். அரசியலுக்கு அப்பாற்பட்டு கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து மக்களுடன் இணைந்து குரல் கொடுத்தால்தான் இத்திட்டத்தை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜன் உட்பட நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த அமைப்பினர் உடனிருந்தனர்.இதைத்தொடர்ந்து சின்னமனூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT