Published : 01 Feb 2018 10:16 AM
Last Updated : 01 Feb 2018 10:16 AM
ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரம் தொடர்பாக, விசாரணை ஆணையம் முன் கோவை மாநகர காவல் துறை முன்னாள் ஆணையர் அமல்ராஜ் இன்று (பிப். 1) ஆஜராகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறை தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. கோவையில் 3-வது கட்ட விசாரணையை நேற்று தொடங்கிய ராஜேஸ்வரன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த ஆகஸ்ட் மாதம் 20 பேருக்கு சம்மன் அனுப்பியதில், 15 பேர் விசாரணை ஆணையம் முன் ஆஜரானார்கள். இதேபோல, நவம்பர் மாதம் 31 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டதில், 8 பேர் மட்டுமே ஆஜரானார்கள். தற்போது 3-வது கட்ட விசாரணைக்கு 20 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மதுரையில் 47 பேரிடமும, சென்னையில் 132 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மார்ச் மாதம் மதுரை, சென்னையில் விசாரணை நடைபெறும்.
கோவையைப் பொறுத்தவரை இதுவே கடைசி கட்ட விசாரணை. இதில் ஆஜராகாதவர்கள், சென்னையில் நடைபெறும் விசாரணையில் ஆஜராக அழைக்கப்படுவார்கள்.
கோவை மாநகர காவல் ஆணையராக இருந்தவரும், தற்போது திருச்சி ஆணையராகவும் உள்ள அமல்ராஜ், இன்று நடைபெறும் விசாரணையில் ஆஜராகிறார். மேலும், 2 உதவி ஆணையர்கள், ஒரு துணை ஆணையரும் ஆஜராக உள்ளனர். ஓராண்டுக்குள் விசாரணையை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT