Published : 01 Feb 2018 09:46 AM
Last Updated : 01 Feb 2018 09:46 AM

அம்மா இரு சக்கர வாகனத்துக்காக லைசென்ஸ் எடுக்க ஆர்டிஓ அலுவலகத்தில் குவிந்த பெண்கள்

அம்மா இரு சக்கர வாகனத்துக்காக லைசென்ஸ் எடுக்க தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பெண்கள் அலை மோதுகின்றனர்.

தமிழக அரசின் அம்மா இரு சக்கர வாகனத் திட்ட விண்ணப்ப படிவம் நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளில் வழங்கப்பட்டு வருகிறது. பிப். 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக ஓட்டுநர் உரிமம் அல்லது பழகுநர் உரிமம் இருக்க வேண்டும் என்பது ஒன்று.

குறைந்த நாட்களே உள்ளதால் பழகுநர் உரிமம் பெறுவதற்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பெண்கள் அதிக அளவில் குவிந்து உள்ளனர். தாம்பரம் அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு 200-க்கும் குறைவானவர்களே பழகுநர் உரிமத்துக்கு விண்ணப்பித்து வந்த நிலையில் தற்போது 500-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கின்றனர்.

காத்திருந்தும் ஏமாற்றமே!

இரு ஆய்வாளர் மட்டும் உள்ள நிலையில் நீண்ட வரிசையில் பெண்கள் காத்திருக்கின்றனர். மேலும் இருக்கும் ஆய்வாளர்களும் சரியான நேரத்தில் அலுவலகத்துக்கு வருவதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. இதனால் அவர்கள் காத்திருந்தும் விண்ணப்பிக்க முடியாமல் திரும்பிச் செல்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: இரு சக்கர வாகனத்துக்கு விண்ணப்பிக்க குறைந்த நாட்களே உள்ளதால், சான்றிதழ்களைப் பெற முடியவில்லை. சான்று இருந்தால் மட்டுமே இரு சக்கர வாகன விண்ணப்பப் படிவம் கிடைக்கிறது. எனவே கூடுதலாக ஆய்வாளர்களை நியமிக்க அரசு சிறப்பு ஏற்பாடு செய்து தர முன் வரவேண்டும் என்றார்.

கூடுதல் பணி

வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இளங்கோவனிடம் கேட்டபோது, வாகன தணிக்கை, புதிய வாகன பதிவு, ஓட்டுநர் தேர்வு என வழக்கமான பணிகளுடன், பழகுநர் உரிமத்துக்கான பணி களையும் மேற்கொண்டு வருகிறோம். திடீரென கூட்டம் வருவதால் பெண்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எங்களால் முடிந்த அளவு பணியாற்றி வருகிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x