Last Updated : 01 Feb, 2018 08:48 AM

 

Published : 01 Feb 2018 08:48 AM
Last Updated : 01 Feb 2018 08:48 AM

சென்னை திருவல்லிக்கேணியில் இடிந்துவிழும் நிலையில் உதவித் தொடக்க கல்வி அலுவலக கட்டிடம்:அடிப்படை வசதிகள் இல்லாததால் அலுவலர்கள், ஆசிரியர்கள் அவதி

சென்னை திருவல்லிக்கேணியில் இடிந்துவிழும் நிலையில் உதவி தொடக்கக் கல்வி அலுவலகக் கட்டிடம் உள்ளது. அடிப்படை வசதிகள் கூட இல்லாததால் அலுவலர்களும், ஆசிரியர்களும் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

சென்னை திருவல்லிக் கேணியில் உள்ள விவேகானந்தர் இல்லம் பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் திருவல்லிக்கேணி மற்றும் மயிலாப்பூர் சரக உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள் செயல்படுகின்றன. தரைத் தளத்தில் திருவல்லிக் கேணி சரக உதவித் தொடக்கக் கல்வி அலுவலகமும், முதல் மாடியில் மயிலாப்பூர் சரக உதவித் தொடக்கக் கல்வி அலுவலகமும் செயல்படுகின்றன. மழை பெய்தால் ஒழுகும் என்பதால் இரண்டாவது மாடியைப் பயன் படுத்த இயலாது. அதனால் இரண்டாவது மாடி பயன்பாடு இல்லாமல் கிடக்கிறது.

இக்கட்டிடத்தின் முன்பகுதி யில் இரண்டு அமரர் ஊர்திகள், மீன்பாடி வண்டி போன்றவை நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தில் அமர்ந்து தினமும் பலர் மது அருந்துகின்றனர். அவர்கள் விட்டுச்சென்ற ஏராளமான மது பாட்டில்கள் அங்கு கிடக்கின்றன. இந்த அலுவலகத்துக்குச் செல்லும் வழி நெடுகிலும் புதர்கள் மண்டியுள்ளன. பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. ஏராளமான விஷப் பூச்சிகள் உள்ளன. கட்டிடத்தின் மேற்கூரையில் விரிசல் தெரிகிறது. கான்கிரீட் கற்கள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளன.

இவ்வளவு மோசமான சூழலில் செயல்படும் அலுவலகத்தில் தான் மயிலாப்பூர், மந்தைவெளி, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகளில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுமார் 500 ஆசிரியர்கள் தொடர்பான நிர்வாகப் பணிகள் அனைத்தும் நடைபெறுகின்றன. இந்த சரகத்தில் பணியாற்றும் ஆசிரியர்களில் 90 சதவீதம் பேர் பெண் ஆசிரியர்களாக உள்ளனர். நிர்வாகம் தொடர்பான பல்வேறு பணிகளுக்காக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

கழிப்பிட வசதி கூட இல்லாதது மட்டுமல்லாமல், ஏராளமான பாதுகாப்பு குறைபாடுகள் நிறைந்த இந்த அலுவலகத்துக்கு வந்து செல்லும் ஆசிரியர்களும், அங்கு பணியாற்றும் அலுவலர்களும் தினமும் ஏராளமான சிரமங்களை அனுபவிக்கின்றனர். இங்கு வந்து செல்வோர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

இந்த அலுவலக கட்டிடங்களைச் சீரமைக்க ரூ.25 லட்சம் ஒதுக்கும்படி பொதுப்பணித் துறைக்கு பள்ளிக் கல்வித் துறை கடிதம் அனுப்பியுள்ளதாகவும், ஆனால் அந்தக் கடிதத்தின் மீது இரண்டு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

பெரிய அளவில் ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடக்கும் முன்பு இக்கட்டிடத்தை இடித்து விட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.

இல்லாவிட்டால், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வளாகத்துக்கு இந்த அலுவலகங்களை மாற்ற வேண்டும் என அலுவலர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x