Published : 01 Feb 2018 08:46 AM
Last Updated : 01 Feb 2018 08:46 AM

வாரண்டி காலத்தில் ஏற்பட்ட பழுதுக்கு கட்டணம் கேட்ட நிறுவனத்துக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிப்பு: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

வாரண்டி காலத்தில் பழுதான காரை சரிசெய்ய ரூ.1.64 லட்சம் கேட்ட கார் விற்பனை நிறுவனம், வாடிக்கையாளருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த சான்டா ஸ்ரீதரன் சென்னை மாவட்ட (தெற்கு) நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்ப தாவது:

ரூ.7.34 லட்சம் செலுத்தி சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு பிரபல நிறுவன ஷோரூமில் கார் வாங்கினேன். இந்நிலையில், கடந்த 2007 செப்டம்பர் 9-ம் தேதி திருப்பதியிலிருந்து சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது வழியில் திடீரென கார் நின்றுவிட்டது. இதையடுத்து, கார் விற்பனை செய்த நிறுவனத்தை தொடர்புகொண்டேன். அந்த நிறுவனத்தைச் சேர்ந்த நபர்கள் வந்து காரை தங்கள் பழுதுபார்ப்பு நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.

அப்போது, ரூ.10 ஆயிரத்தை முன்பணமாக அளித்தேன். அதன்பிறகு, பல நாட்களாகியும் பழுதை நீக்கியது தொடர்பாக எந்த தகவலையும் அவர்கள் அளிக்கவில்லை. திடீரென ஒரு நாள் குறைபாடுகளைச் சரிசெய்துவிட்டதாகவும் அதற்காக செலுத்திய முன்பணம் போக ரூ.1.64 லட்சத்தை அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். ஆனால், முறையான ரசீதை அவர்கள் அளிக்கவில்லை. இவ் வாறு மனுவில் தெரிவித்திருந் தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை மாவட்ட (தெற்கு) நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் தலைவர் எம்.மோனி, உறுப்பினர் கள் கே.அமலா, டி.பால்ராஜசேகரன் ஆகியோர், “கார் விற்பனை நிறுவனம் ரூ.1.64 லட்சத்துக்கு என்னென்ன பழுதை நீக்கியது என்பது குறித்து உரிய ரசீதுகளை சமர்ப்பிக்கவில்லை. இது சேவை குறைபாடாகும். மேலும், கார் தயாரிப்பின்போது குறைபாடு இருந்துள்ளது. ஆனால், அது வாரண்டி காலத்தில் வந்துவிடுகிறது. எனவே, மனுதாரரிடமிருந்து எந்த தொகையும் பெறாமல் காரை திருப்பி அளிக்க வேண்டும். அதோடு, மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.20 ஆயிரம், வழக்கு செலவாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x