Published : 06 Jan 2018 10:05 PM
Last Updated : 06 Jan 2018 10:05 PM

சென்னையில் சாலைத்தடுப்பை இழுத்துச்சென்ற இளைஞர் பிடிபட்டார்: மேலும் பலருக்கு வலை

சாலைத் தடுப்பை இழுத்துச் சென்ற மோட்டார் பைக் இளைஞர் ஒருவர் சிக்கியுள்ளார், மேலும் பலரை பிடித்து போக்குவரத்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

மூன்று நாட்களுக்கு முன்னர் முதல் வாட்ஸப், வலைதளங்களில் ஒரு வீடியோ பிரபலமாகியது. கடந்த ஜன.2-ம் தேதி அன்று இரவு மெரினா காமராஜர் சாலை மற்றும் காந்தி மண்டபம் படேல் சாலையில் பைக் ரேஸ் இளைஞர்கள் சாலைத் தடுப்புக்கு அமைக்கப்பட்டுள்ள பேரி கார்டுகளை வெகுதூரம் தீப்பொறி பறக்க இழுத்துச் சென்றனர்.

சென்னை கடற்கரை காமராஜர் சாலை, ராஜ்பபவன் படேல் சாலை இரண்டு இடங்களில் இந்தக் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. வாகனத்தை ஓட்டுபவர்கள் அனைவரும் இளைஞர்கள். இந்த வீடியோ காட்சிகள் விவகாரம் போக்குவரத்து போலீஸார் கவனத்துக்கும் சென்றது. இதையடுத்து அவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டன, சட்டம் ஒழுங்கு, நுண்ணறிவு போலீஸாரும் முடுக்கி விடப்பட்டனர். அந்த இளைஞர்களைப் பிடிக்கும் முயற்சியில் பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று போலீஸார் கேட்டுக்கொண்டு இளைஞர்கள் பற்றி 9003130103 என்ற போக்குவரத்துக் காவல் கட்டுப்பாட்டு அறை செல்போன் எண் அல்லது 103 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீஸார் கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில் முக நூல் ஒன்றில் வாலிபர் ஒருவர் தங்களை போலீஸார் மடக்கிய ஆத்திரத்தில் சாலைத்தடுப்புகளை இழுத்துச்சென்றதாக சாகசம் நிகழ்த்தியது போல் பேசிய வீடியோ வைரலாகியது. இது போலீஸாருக்கும் அனுப்பப்பட்டது. அதில் அந்த இளைஞர் கோபத்தினால் தானும் தனது நண்பர்களும் சாலையில் பேரிகார்டை இழுத்துச்சென்றதாக கூறியிருந்தார்.

அதை வைத்து அந்த இளைஞரை போலீஸார் தேடி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் பெயர் பீட்டர் எனபது தெரியவந்தது. மேலும் அவருடன் வந்த இளைஞர்களை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x