Published : 06 Jan 2018 05:15 PM
Last Updated : 06 Jan 2018 05:15 PM

சூர்யா படத்துக்கு தடை கேட்டு பிரசாந்தின் தாயார் வழக்கு: உயர் நீதிமன்றம் மறுப்பு

நடிகர் சூர்யா நடித்து பொங்கலுக்கு வெளியாக உள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்தை வெளியிட தடைவிதிக்க பிரசாந்தின் தாயார் தொடர்ந்த வழக்கில் தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நடிகர் சூர்யா நடித்து விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்தை வெளியிட தடை கோரி நடிகர் பிரஷாந்தின் தாய் சாந்தி தியாகராஜன் உரிமையாளராக உள்ள ஸ்டார் மூவீஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தபோது, மும்பை ஓப்ரா ஹவுஸ் கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்தியில் 2013ஆம் ஆண்டு வெளியான 'ஸ்பெஷல் 26' என்ற திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் எடுப்பதற்கான உரிமையை பெற்றுள்ளதாகவும், பின்னர், தமிழில் படம் எடுக்கும் உரிமையை மட்டும் ஆர்.பி.பி. பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்துக்கு ஓராண்டுக்குள் படத்தை எடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் விற்றதாகவும் சாந்தி தியாகராஜன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தங்களிடம் உரிமம் பெறாமல் அந்த கதையை பயன்படுத்தி தமிழில் தானா சேர்ந்த கூட்டம் என்ற பெயரில் படம் எடுத்துள்ளதாகவும், அதை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

படத்தை தயாரித்துள்ள ஸ்டூடியோ கிரீன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆர்.பி.பி. பிலிம் பேக்டரி நிறுவனத்திடம் இருந்து உரிமையை பெற்றுதான் படம் தயாரிக்கபட்டுள்ளது, படம் வெளியாகவுள்ள கடைசி நேரத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கடைசி நேரத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதால் படத்தை தமிழ் தெலுங்கில் வெளியிடலாம் என கூறி சாந்தி தியாகராஜனின் இடைக்கால கோரிக்கை மனுவை முடித்து வைத்தார். மேலும் பட உரிமை தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் பிரதான வழக்கில் விசாரிப்பதாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x